தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் மின் தடை காரணமாக, பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுவரை மின் தடை பிரச்சனை இல்லாமல் இருந்து வந்த தொழில் நகரமான கோவையிலும் கடந்த 2 நாட்களாக மின் வெட்டு தலைதூக்கி வருகிறது. முன்னறிவிப்பு இன்றி அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொழில் பாதிப்பு ஏற்படுவதாக தொழில் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, “கடந்த பல நாட்களாக தமிழகம் எங்கும் மின் தடையால் பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். ஆனாலும் கோவை மாவட்டத்தில் பெரிய பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தமிழகத்தில் மின்வெட்டு சரி செய்யப்பட்டதாக மின்சார வாரியமும், அமைச்சர்களும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்படாமல் சில துணை மின் நிலையங்களில் 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடம் வரை ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் மின் நிறுத்தமும், சில துணை மின் நிலையங்களில் ஒரு மணி நேரமும் முதல் இரண்டு மணி நேரம் மின் நிறுத்தம் என பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழில் முனைவோர்களுக்கு பெரும் இடி விழுந்தது போல் ஆகி உள்ளது. ஜேம்ஸ் கோவை தொழில் துறையினரை துயரத்தில் இருந்து மீட்பதற்கு மின்சார துறை அமைச்சர் முன் வரவேண்டும். அறிவிக்கப்படாத இரண்டு நாட்களாக தொடரும் மின்வெட்டால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் தொழில் முனைவோர்களுக்கு இழப்புகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மின் கட்டணத்தில் நிலை கட்டண உயர்வு, பயன் படுத்தும் மின் கட்டண உயர்வு, மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை, வட மாநிலத் தொழிலாளிகளின் கூலி உயர்வு என்று எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் குறு சிறு தொழில்கள் இரண்டு நாட்களாக இருண்ட நாட்களாக மாற்றப்பட்டுள்ளன. ஓடி கொண்டிருக்கும் இயந்திரங்கள் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மிஷனரிகள் சடார் என்று நிறுத்தப்படுவதால், ஆட்டோமேட்டிக் இயந்திரங்களில் உள்ள உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த டூல்கள் பாதிப்பு என பல நஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். எக்காரணத்தைக் கொண்டும் தொழில்துறையின் மேல் மின் வெட்டை திணிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உண்மையில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு மின்சாரம் வழங்குவதில் நெருக்கடி ஏற்படுமானால் மின்சார வாரியம் மின்வெட்டு செய்யும் பகுதிகளை முன்கூட்டியாக அறிவித்து, குறைந்தபட்சம் தொழில்துறையினரை இயந்திரங்களும் உதிரி பாகங்களும் பயன்படுத்தும் டூல்களையும் நஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து இந்த மின்வெட்டு நடவடிக்கையில் இருந்து கோவையை பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். "விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை; இதோடு விட்டால் நன்றாக இருக்கும்" - கனிமொழி சந்தோஷ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/coimbatores-industrial-sector-affects-due-to-unscheduled-power-cuts



