ஜூபா, தெற்கு சூடானில் கால்நடை கொள்ளையர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 49 அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில், பெரும்பான்மையான மக்களின் பிரதான தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும் விளங்குவது கால்நடை வளர்ப்பு ஆகும். அங்கு வாழும் பல்வேறு பழங்குடியின மக்களிடையே, தங்களின் மாடுகளைப் பெருக்குவதிலும், அவற்றுக்கான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தண்ணீரைப் பிடிப்பதிலும் பல ஆண்டுகளாகக் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்தப் போட்டி அடிக்கடி பெரும் வன்முறையாக மாறுவது அந்நாட்டின் தீராத பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில், வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 'யூனிட்டி' மாகாணத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கும்பல் அதன் பக்கத்து மாகாணமான 'வரப்' பகுதியில் உள்ள டோஞ்ச் பகுதியைக் குறிவைத்து ஒரு சதித் திட்டத்தைத் தீட்டியது. அதன்படி அதிகாலையில் கிராம மக்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, ஆயிரக்கணக்கான மாடுகளைக் கொள்ளையடிக்கும் நோக்கில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று மாட்டுத் தொழுவங்களைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டது. அப்போது அங்கு காவல் பணியில் இருந்தவர்கள் கொள்ளையர்களைத் தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளைக் கும்பல், தங்களின் நவீன ரகத் துப்பாக்கிகளால் அவர்களை சரமாரியாக சுட்டனர். திடீர் துப்பாக்கிச் சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிய அப்பாவி பொதுமக்கள் மீதும் இரக்கமின்றி அந்த கும்பல் சுட்டதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 49 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 33 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/49-killed-33-injured-in-south-sudan-cattle-raid



