சென்னை, பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது என்று பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பரந்தூர் விமான நிலையம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பையும் தாண்டி காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர், ஏகனாபுரம் சுற்றியுள்ள 13 கிராமங்களில் உள்ள 5300 ஏக்கரில் தமிழகத்தின் இரண்டாவது பசுமை விமான நிலையத்தை அமைக்க இருந்த திட்டத்தை நேற்றைய சட்டமன்ற கூட்டத்தில் ரத்து செய்வதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. இப்பகுதி வெறும் மண்ணால் ஆன நிலம் அல்ல. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல், தென்னை உள்ளிட்ட நஞ்சை பயிர்கள், தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்து வரும் பகுதிகளாகும். இதனை நம்பியே பல ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தையே நிலைகுலையச்செய்து, இவர்கள் தன் வாழ்விடங்களையே மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என அஞ்சி தொடர்ந்து இப்பகுதி மக்கள் அரசின் எதிர் நடவடிக்கையும் எதிர்கொண்டு போராடி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் போராடிவரும் நிலையில் இந்தத் திட்டத்தை முற்றாக ரத்து செய்தது பாராட்டத்தக்கது. இரண்டாவது விமான நிலையம் ஒன்றிய அரசும் இந்த இடத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான சில மாறுபாடுகளை தெரிவித்து இருந்த நிலையில் தமிழக அரசு இதை அறிவித்துள்ளது. இது எதிர்த்து போராடியவர்கள் மீது காவல்துறை போட்டுள்ள வழக்குகளை அனைத்தையும் தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்திட வேண்டும். இந்த இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு, புதிய இடம் தேர்வு செய்யப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பெரும்பகுதி விளைநிலங்களாக, குடியிருப்புகளாக உள்ள பகுதிகளை தேர்வு செய்து மறுபடியும் விவசாயிகளை துயரத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். பரந்தூர் பகுதி விவசாயிகளுக்கும், போராட்டக் குழுவினருக்கும் வாழ்த்துக்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/paranthur-airport-project-cancelled-tamil-nadu-farmers-association-welcomes



