திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலைப்பாதையில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில், பெண் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வளைவில் நேர்ந்த விபத்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதியில் இருந்து நெம்மாரா நோக்கி இன்று காலை 9:30 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. போத்துண்டி அணை சோதனைச் சாவடிக்கு அருகே உள்ள ஒரு வளைவில் திரும்பியது. அப்போது தொடர் மழை காரணமாக நனைந்திருந்த சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென சாலையோரப் பள்ளத்தில் இருந்த தேக்குத் தோட்டத்திற்குள் பாய்ந்து கவிழ்ந்தது. பெண் தொழிலாளி பலி இந்த விபத்தில் நெல்லியாம்பதி ஆரஞ்சு தோட்டத்தில் பணிபுரிந்து வந்த ஜெயந்தி (வயது 55) என்ற பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்த போது, அதன் கதவு திறந்து கொண்டதால் அவர் வெளியில் தூக்கி வீசப்பட்டு இடிபாடுகளில் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவருடைய கணவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தீவிர மீட்புப் பணி விபத்து நடந்தவுடன் உள்ளூர் மக்கள், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து விரைவாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பள்ளத்தில் உருண்ட பேருந்து அங்கிருந்த மரங்களுக்கு இடையே சிக்கி நின்றதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு நெம்மாரா மற்றும் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விபத்து குறித்து நெம்மாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/woman-dies-after-government-bus-overturns-into-a-ravine




