தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில், சுமார் 2 கி.மீ பரப்பளவிற்குள் டஜனுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிகளும், கல்லூரிகளும் செறிந்து காணப்படுகின்றன. தூய யோவான் கல்லூரியின் சுவர்களுக்கு வெளியே, மலை போல் குப்பைகள் கொட்டி கிடக்கின்றன. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள தூய யோவான் கல்லூரி, தூய யோவான் பள்ளி, கிறிஸ்துராஜா பள்ளி போன்ற நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் இதன் அருகே மருத்துவமனைகளும், விளையாட்டு மைதானங்களும் உள்ளன. பாளையங்கோட்டையின் மைய பகுதியாக உள்ள இச்சாலையில் ஏராளமான பள்ளி கல்லூரி வாகனங்கள் கடந்து செல்கின்றன, இங்கு குப்பைகள் குவிந்து கிடப்பதால் சாலையை கடந்து செல்வதற்கு வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. இது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் பலமுறை மக்கள் புகார் தெரிவித்த நிலையிலும், குப்பைகள் முழுமையாக அகற்றப்படவில்லை. மீண்டும் மீண்டும் இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு கொண்டே இருக்கின்றன. "இந்த இடத்துல ரொம்ப வருஷமா குப்பை கொட்டிக்கிட்டே இருக்காங்க. இத சுத்தி தான் முக்கியமான பள்ளிக்கூடம் எல்லாம் இருக்குது. தினமும் இந்த ரோட்ல தான் போயிட்டு வந்துட்டு இருக்கிறோம், காத்துல குப்பை எல்லாம் வண்டி முன்னாடி வந்து விழும். குப்பையை சாப்பிடுவதற்காக ஆடு, மாடுகள் எல்லாம் வரும், காலையிலயும் சாயங்காலமும் பள்ளிக்கூட பிள்ளைகளை கூப்பிட வர்ற நேரத்துல டிராபிக் ஜாம் ஆகுது. சின்னப் பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கிறதுனால, டக்குனு ஏதாவது நோய் வந்துரும். குப்பையை கொட்டுவதற்கு வேற இடமே கிடைக்கலையா?" என்கிறார்கள், அப்பகுதியில் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுநர்கள். குப்பைகள் மட்டுமல்லாமல் அப்பகுதியை சுற்றிலும் கழிவறைகள் இல்லாத காரணத்தினால், சிறுநீர் கழிக்கும் பகுதியாகவும் பயன்படுத்துகின்றார்கள் பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள். "இந்த ரோட்டை ஸ்கூல் காலேஜ் எல்லாம் இருக்கிற இடம்னு நினைச்சாங்களா இல்ல வேற எதுவும் நினைச்சாங்களான்னு தெரியல. ஒரு பக்கம் குப்பையை கொட்றாங்க, இன்னொரு பக்கம் பாத்ரூமா யூஸ் பண்றாங்க. இந்த இடத்தை தாண்டி போகும்போது நாற்றம் தாங்க முடியல, வாந்தி தான் வரும். இதனால இந்த பகுதியை கடந்து போற மாணவர்கள் எல்லாரும் ரொம்ப பாதிக்கப்படுறாங்க.நிறைய தடவை மாநகராட்சி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணியாச்சு. பெருசா எந்த நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியல, சீக்கிரம் இதை சரி பண்ணி கொடுத்தா நல்லா இருக்கும்." என வேதனை தெரிவிக்கிறார்கள் அப்பகுதியில் படிக்கும் மாணவர்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பார்களா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/palayamkottai-school-college-road-turns-into-garbage-dumping-ground




