லக்னோ, உத்தர பிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் கோக்ராஜ் சுங்கச்சாவடி உள்ளது. கடந்த 26-ந்தேதி இந்த வழியாக வந்த எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி, சுங்கச்சாவடியில் நிற்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சுங்கச்சாவடி தடுப்புசுவரின் மீது மோதியதால் டேங்கர் லாரியில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதனால் பயங்கரமாக தீப்பற்றி எரிய ஆரம்பித்ததால் சுங்கச்சாவடி முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டேங்கர் லாரி சுங்கச்சாவடியை கடக்கும் முன்பே எரிவாயு கசியத் தொடங்கி அடர்த்தியான வெள்ளை நிற புகை பரவுவதும், பின்னர் திடீரென பயங்கர தீப்பிழம்பு ஏற்பட்டு லாரியும், சுங்கச்சாவடியும் பற்றி எரிவதும் வீடியோவில் தெரிகிறது. இந்த தீ விபத்தில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு சொந்தமான 16 இருசக்கர வாகனங்களும், இரண்டு கார்களும் எரிந்து நாசமானது தெரியவந்தது. இதில் டேங்கர் லாரி டிரைவர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் சம்பவம் நடந்த நாளிலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந்தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இறந்தவர்கள் ரேபரேலியைச் சேர்ந்த ஹிராமணி சிங் (29) மற்றும் மத்தியபிரதேசத் தின் சிதி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண பால் மவுர்யா (23) என்று தெரியவந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/massive-fire-after-gas-tanker-truck-rams-into-toll-plaza-in-uttar-pradesh-death-toll-rises-to-5



