காஞ்சிபுரம் பஞ்சபூதத்தலங்களில் பூமித்தலம். இந்தத்தலத்தில் அமைந்திருக்கும் சிவத்தலங்கள் விஷ்ணு தலங்கள் எனப் பலநூறு கோயில்கள் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட காஞ்சிபுரத்தைக் காக்கும் காவல் தெய்வமாகத் திகழும் ஓர் அம்மன் ஆலயம் ஒன்று உண்டு. அதுதான் 'அருள்மிகு காஞ்சி கருக்கினில் அமர்ந்தவள் அம்மன்' ஆலயம். காஞ்சிபுரம் தெற்கு பட்டடை கிராமத்தில் கிராம தேவதையாக அமர்ந்துள்ளது இந்த ஆலயம். மகேசனிடம் சாகா வரம் பெற்ற மகிஷாசுரன், முனிவர்களையும் பக்தர்களையும் பயமுறுத்தி அழிக்க நினைத்ததால், அவனை சம்ஹாரம் செய்ய அனைத்து சக்தி தெய்வங்களும் சேர்ந்து ஒரே சக்தியாக உருவெடுத்ததாகச் சொல்கின்றன புராணங்கள். கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் பனை மரத்தை 'கருக்கு மரம்’ என்றும் அழைப்பர். அதேபோல், நள்ளிரவு நேரத்துக்கு 'கருக்கு நேரம்’ என்று பெயர். பனைமரத்தின் கீழே நடு இரவில் தாமரைப் பீடத்தின் மீதமர்ந்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததால் அம்பாளுக்குக் 'கருக்கினில் அமர்ந்தவள்’ என்கிற திருநாமம் ஏற்பட்டது. இந்தக் கோயிலின் தல விருட்சமாகப் பனைமரம் திகழ்கிறது. தாமரைப் பீடத்தில் அமர்ந்தவண்ணம் சூரனை வதம் செய்வது போலவே மூல சந்நிதியில் அம்மன் காட்சியளிக்கிறாள். வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் இந்த அம்மன், தன் திருவடியை மகிஷாசுரனின் தலையிலும், அவன் காலின் மீதும் வைத்தபடி அருள்காட்சி தருகிறார். தலையை சற்றே இடதுபுறம் சாய்த்தபடி, கையில் திரிசூலம் ஏந்திய கோலத்தில் வீற்றிருக்கிறாள் அன்னை. இந்தத் திருக்கோலமே தரிசிப்பவர்களை பரவசப்படுத்தும். அன்னையின் பராக்கிரமம் விளங்கும். மனதின் பிணிகள் ஓயும். ஈசன் இங்கே வேதபுரீஸ்வரராக சந்நிதிகொண்டு அருள்கிறார். இந்த ஈசனை வணங்க கல்வி கேள்விகளில் மேன்மை உண்டாகும். கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோயில் இந்த மூலவர் கருவறை, 1500 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்கிறது கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று. அந்த அளவுக்குப் பழைமையும் பெருமையும் வாய்ந்த ஆலயம் இது. இந்த ஆலயத்தில் சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்து காட்சியளிப்பது சிறப்பு. எனவே இதை பாஸ்கர க்ஷேத்திரம் என்றும் சொல்கிறார்கள். இங்கு வந்து வழிபட்டால் சூரிய தசை நடப்பவர்களின் வாழ்க்கை நலமாகும். அரசு வேலை தேடுபவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் தேடிவரும் என்பது நம்பிக்கை. மேலும் ஆரோக்கியம் அருள்பவரும் சூரியனே என்பதால் இங்கு வந்து கருக்கினில் அமர்ந்த அம்மனையும் சூரியபகவானையும் வழிபட்டால் நோய்களில் இருந்து நிவாரணம் விரைவில் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். ஆடி மாதத்தில் ஆடிப் பூரம் விழா இங்கே விமர்சையாகக் கொண்டாடப்படும். ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு, அம்மன் வீதி உலா வருகிறாள். ஆடியில் ஐந்து வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப் படுவதுடன், ஐந்து ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை நேரத்தில் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து பம்பை, உடுக்கை, சிலம்பம் இசைத்து, பூஜைகள் நடத்தப்பெறும். இந்தக் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீஜேஷ்டாதேவி அம்மனுக்கு கறுப்பு ஆடை சாற்றி, இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட, திருமணத் தடை நீங்கும். இங்குள்ள புற்று நாகம்மனுக்குப் பால் வைத்து வழிபட, நாக தோஷம் நிவர்த்தியாகும். மேலும் திருமணத்தடை உள்ளோர், குழந்தை வரம் வேண்டுவோர், நாகதோஷம் உள்ளவர்கள் மற்றும் மனச் சஞ்சலம் கொண்டோர், இந்த அம்மன் பாதத்தில் வைத்து பூஜித்த எலுமிச்சைப் பழத்தை எடுத்துச் சென்று தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட, நினைத்தவை கைகூடும் என்பது ஐதிகம். மகிஷாசுரமர்த்தினி கோயிலின் உள் பிராகாரத்திற்குள் செல்லும் வாசல் பகுதியில் அழகிய யானை மற்றும் சிம்மத் தூண்கள் அமைந்துள்ளன. அவை பல்லவ காலக் கட்டிடக்கலையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. வெளிப்பிரகாரத்தில் பல்வேறு சந்நிதிகளும் கோஷ்டச் சிற்பங்களும் அமைந்துள்ளன. கிழக்கு சுவரில் இடம்புரி விநாயகர் அருள்பாலிக்கிறார். மேலும் மகிஷாசுரமர்த்தினி, விஷ்ணு துர்கை சிவதுர்க்கை மற்றும் தட்சிணாமூர்த்தி திருக்கோலங்களுடன் கோஷ்டத்தில் அருள்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/spiritual/temples/karukinil-amarnthaval-temple-kanchipuram




