சென்னை முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில், உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவதூறு பேச்சு அப்போது அவர், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம்போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதல்-அமைச்சராக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நம் தலைவர் இந்த நிலைமை ஏற்பட விட்டிருப்பாரா? என்றார். தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக அவதூறாக அவர் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சையில் த.வெ.க. மகளிரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக அவதூறாக பேசியது தொடர்பாக, உதயநிதிக்கு எதிராக ஐ.டி., பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய தஞ்சை போலீசார் இன்று சென்னை வந்தனர். போலீசார் குவிப்பு இதேபோன்று, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி குடும்பத்தினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க காலஅவகாசம் வேண்டும் என அவர்கள் தரப்பில் போலீசிடம் கூறப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, உதயநிதியின் வீட்டுக்கு முன் தி.மு.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். உதயநிதி வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். நீதிபதி உத்தரவு இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில், கைது நடவடிக்கையை தவிர்க்க, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு இன்று 12 மணியளவில் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. அதனால் உதயநிதி மீது மதியம் 12 மணி வரை கைது நடவடிக்கையை தவிர்க்கும்படியும், எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை காவல் துறையினரிடம் தெரிவிக்கும்படி நீதிபதி தெரிவித்து உள்ளார். உதயநிதி கைது இந்த சூழலில், முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு வழக்கு தொடர்பாக உதயநிதியை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். தி.மு.க. தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/defamatory-speech-against-chief-minister-vijay-urgent-plea-in-madras-high-court-on-behalf-of-udayanidhi-stalin




