கவிஞர் வாலியின் தற்கொலை எண்ணத்தையே ஒரு பாடல் மாற்றியிருக்கிறது. அந்த பாடல் எந்தப் படத்தில் இடம்பெற்றது?, யார் எழுதியது? என்பதை தொடர்ந்து பார்க்கப்போகிறோம். மயக்கமா கலக்கமா. ஜெமினி கணேசன் - தேவிகா நடிப்பில் 1962-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், 'சுமைதாங்கி'. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில், 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்', 'மயக்கமா. கலக்கமா.' உள்ளிட்ட பாடல்கள் இன்று வரை பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். இதில், 'மயக்கமா கலக்கமா' என்ற பாடல், கர்நாடக இசையின் புகழ்பெற்ற சோக ராகமான சாருகேசி ராகத்தில் 'கம்போஸ்' செய்யப்பட்டது. இந்த பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்து இருந்தனர். கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். அவர் இந்த பாடலை எழுத முற்பட்ட நேரத்தில், கடுமையான பொருளாதார நெருக்கடியிலும், மன அழுத்தத்திலும் இருந்தார். அதனால், தனது சொந்த வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏமாற்றங்களையும், கஷ்டங்களையும் தான், அந்த பாடலின் வரிகளாக வடித்தார். "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்", "வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்", "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்று வார்த்தை வரிகளால் தனது வாழ்க்கையை கூறியிருப்பார். தற்கொலை எண்ணத்தை மாற்றியது இந்த பாடல்தான் கவிஞர் வாலியின் தற்கொலை எண்ணத்தையே மாற்றியது என்றால் நம்ப முடிகிறதா? ஆரம்ப காலத்தில் சினிமாவில் பட்டெழுத வாய்ப்பு கிடைக்காமல், வறுமையின் பிடியில் கவிஞர் வாலி சிக்கித் தவித்தார். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அவர், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் சென்னையில் உள்ள ஒரு ரெயில் நிலையத்திற்கு சென்றார். அப்போது, ரெயில்வே பிளாட்பாரத்தில் இருந்த டீக் கடையில் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் காந்தக் குரலில் வெளிவந்த, "மயக்கமா கலக்கமா" என்ற பாடல்தான் அது. அந்த பாடல் வாலியின் காதுகளில் விழுந்தது. குறிப்பாக, அதில் வந்த "வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்", "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்ற வரிகள் அவரது மனதை பெரிதும் உலுக்கின. வலியை மாற்றிய வரிகள் இந்த பாடல் வரிகளை கேட்ட பிறகு, தற்கொலை எண்ணத்தில் இருந்த கவிஞர் வாலியின் மனநிலை மாறத் தொடங்கியது. "நம்மை விடப் பல மடங்கு கஷ்டப்படுபவர்கள் இருக்கும்போது நாம் ஏன் உயிரை விட வேண்டும்? போராடித்தான் பார்ப்போமே" என்ற உத்வேகத்துடன் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு திரும்பினார். பின்னாளில், கவிஞராக உச்சம் பெற்று கவிஞர் கண்ணதாசனுக்கே போட்டியாக திகழ்ந்தார். ஒரு கவிஞரின் வலியை இன்னொரு கவிஞரின் வரிகள் போக்கியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/specials/do-you-know-who-wrote-the-song-that-changed-poet-vaalis-suicidal-thoughts




