கிருஷ்ணகிரி, ஒசூர் வனக்கோட்டத்தில் யானைகளை கண்காணிக்க கூடுதலாக 100 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்த வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. யானை வழித்தடங்கள் ஒசூர் வனக்கோட்டம் 1,492 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது ஆகும். இதில் சுமார் 10,300 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய 3 யானை வழித்தடங்களை அரசு முறைப்படி அறிவித்துள்ளது. இந்த வழித்தடங்கள் அனைத்தும் முழுமையாக காப்புக்காடு பகுதிகளிலேயே அமைந்துள்ளதால், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கோ அல்லது பட்டா நிலங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என வனத்துறை தெளிவுபடுத்தி உள்ளது. இருப்பினும் மனித - யானை மோதல்களை குறைக்கவும், விவசாய பயிர்களைப் பாதுகாக்கவும் வனத்துறை பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் யானைக் கூட்டத்தின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும், அவை குடியிருப்பு பகுதிகளை நெருங்குவதற்கு முன்பே கண்டறிந்து மீண்டும் காட்டுக்குள் திருப்புவதற்கும் தெர்மல் கேமரா பொருத்தப்பட்ட டிரோன்கள் பெரும் உதவியாக உள்ளன. இதேபோல் இரும்பு கம்பி வடம் வேலிகள் மூலமும், யானைகள் விளைநிலங்களுக்குள் நுழைவது தடுக்கப்பட்டு வருகிறது. மேலும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க 20-க்கும் மேற்பட்ட பயிர்சேத தடுப்புக் குழுக்கள் இரவு, பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்கள் குறிப்பாக ஊடேதுர்கம் வனப்பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை யானைகள் கடக்கும்போது விபத்தில் சிக்கி இறந்து வந்தன. அதாவது 2003-ம் ஆண்டு 5 யானைகளும், 2013-ம் ஆண்டு 3 யானைகளும் ரெயில் விபத்தில் சிக்கி இறந்தன. எனவே அப்பகுதியில் வனத்துறையினர் தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய 7 கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இதற்கான கட்டுப்பாட்டு அறை மாவட்ட வனக்கோட்ட அலுவலகத்தில் உள்ளது. அங்கிருந்து கண்காணித்து ரெயில்வேக்கு தகவல்களை பரிமாறி வருகின்றனர். இதன்மூலம் யானைகள் விபத்தில் சிக்குவது குறைந்து உள்ளது. இதேபோல் வனப்பகுதியில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்கவும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு வருகின்றனர். 100 இடங்களில். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் ரெயிலில் அடிபடாமல் தடுக்கவும், குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்கவும் 71 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு உள்ளோம். இதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அரசின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/ai-cameras-at-100-more-spots-in-hosur-forest-division




