உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர். கோவில் வளாகத்தில் இருக்கும் உண்டியலில் அதிக அளவில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல் பணம் கையாடல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு விசாரணை குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. மவுனம் காப்பது ஏன்? இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பிரதமர் மோடிக்கு நேற்று கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நாடாளுமன்றத்தில் ராமர் அறக்கட்டளையை அறிவித்தவர் பிரதமர் மோடி. ஆனால் அதன் உறுப்பினர்கள் அவரது அரசாங்கத்தால் மட்டுமே நியமிக்கப்பட்டனர். அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத் மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பது பொதுவான விஷயம். அறக்கட்டளையின் முன்னாள் பொது செயலாளரும் பிரதமரின் நெருங்கிய கூட்டாளிதான். விரிவான விசாரணை இத்தகைய குற்றச்செயல் நடந்திருக்கும் நிலையில், நீங்கள் இப்போது மவுனம் காப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பொறுப்புக்கூறலையும் நிதியை மீட்டெடுப்பதையும் உறுதி செய்வது உங்கள் கடமை. பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து காணிக்கைகளையும் கையாண்ட விதம் உள்பட அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்து உடனடியாக சுதந்திரமான மற்றும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை ஒவ்வொரு பக்தரும் அறிந்து கொள்ளும் வகையில், விசாரணையின் முடிவுகளையும் அறக்கட்டளையின் கணக்கு விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும். பதவி அல்லது செல்வாக்கு எதுவாக இருந்தாலும், இதற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் பொறுப்புக் கூற செய்யப்பட வேண்டும். நீங்கள் எவ்வளவு வெளிப்படையாகவும், விரைவாகவும் செயல்படுகிறீர்கள் என்பதில்தான் உங்கள் அரசாங்கத்தின் மற்றும் அந்த அறக்கட்டளையின் நம்பகத்தன்மை அடங்கியுள்ளது. இதனை இந்திய மக்கள் உற்றுநோக்கி கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/ayodhya-temple-donation-issue-rahul-gandhi-writes-to-prime-minister-modi




