நேபாளம்-திபெத் எல்லையில் உள்ள லாங்டாங் தேசியப் பூங்கா அருகே 5,200 மீட்டர் உயரத்தில் இருந்து மிகப்பெரிய பனி மலை ஒன்று சரிந்து விழுந்தது. இந்து சமயத்தினர், அதிலும் சிவனை வழிபடுபவர்கள் திபெத்தில் உள்ள புனிதமான கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்வார்கள். இந்த இடம் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி வசிக்கும் இறைவனின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்த மலை இந்துக்களுக்கு மட்டுமல்லாமல், புத்த மதத்தினர், சமணர்கள் மற்றும் பான் மதத்தினருக்கும் புனிதமானதாகும். கைலாய மலை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் நகாரி பகுதியில், இந்திய-நேபாள எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. கைலாய மலையைச் சுற்றியுள்ள பரந்த நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்துதான் சிந்து, பிரம்மபுத்திரா, சட்லஜ், கங்கையோடு இணையும் கர்ணாளி ஆகிய நதிகள் உருவாகின்றன. இந்தியாவில் உத்தரகாண்ட் பாதை, அதாவது லிபுலேக் கணவாய் வழியாகவும், சிக்கிம் பாதை, அதாவது நாதுலா கணவாய் வழியாகவும், நேபாளப் பாதையில் காத்மாண்டு வழியாகவும் அங்கு போகமுடியும். மானசரோவர் ஏரியின் சிறப்பம்சம் என்னவென்றால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகள் உப்புத்தன்மையோடு இருந்தாலும், அந்த ஏரி மட்டும் மிகவும் சுவையான நன்னீராகும். அந்த ஏரியில் இந்துக்கள் புனித நீராடுவார்கள். தமிழக அரசு, கைலாய மலை யாத்திரை செல்பவர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ரூ.1 லட்சம் மானியமாக வழங்குகிறது. திபெத்தில் உள்ள இமயமலைப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகப் பாறை மற்றும் மண் அடுக்குகள் பனியால் சூழப்பட்டு, நிரந்தர உறைநிலைப் பகுதிகளாக உள்ளன. காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பனிப்பாறைகள் உருகி வருவதைப்போல இமயமலையில் உள்ள பனிப்பாறைகளும் உருகி கீழே விழுகின்றன. இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் கோவில்களின் பூமியான நேபாளத்தில் வரலாறு காணாத பேரிடரை ஏற்படுத்திவிட்டது. நேபாளம்-திபெத் எல்லையில் உள்ள லாங்டாங் தேசியப் பூங்கா அருகே 5,200 மீட்டர் உயரத்தில் இருந்து மிகப்பெரிய பனி மலை ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் உருவான பெரும் வெள்ளம் முதலில் லெண்டே கோலா ஆற்றில் பாய்ந்தது. பின்னர் அந்த வெள்ளம் போடே கோஷி ஆற்றில் கலந்து, தண்ணீருடன் மண், சகதி, பாறைகள், மரங்கள் என நிலப்பரப்பில் இருந்த அனைத்தையும் வாரிச் சுருட்டிக்கொண்டு கடும் வேகத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்தது. சுமார் 30 மீட்டர் உயரத்துக்கு எழுந்த அந்தச் சகதிக் குழம்பு, சுனாமியைப்போல தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்து, அங்கிருந்த கட்டிடங்களையெல்லாம் இழுத்துக்கொண்டு சென்றது. இதில் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்களும் சிக்கிக்கொண்டனர். ஏராளமானவர்கள் மலையாகக் குவிந்த சேற்றில் புதைந்து கிடப்பதால், அவர்களின் உடல்களைக்கூட மீட்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 85 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. நேபாளத்தில் இதேபோன்று மற்றொரு சம்பவம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சீனா அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற இயற்கையின் கோபத்துக்கு கடிவாளம் போடமுடியாது. என்றாலும், இதைக் கணித்து முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் இருக்கின்றன. நேபாளத்தில் பனிப்பாறை வெள்ள அபாயங்களைக் கணிக்கும் அமைப்புகளை மேம்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு ஐ.நா. சபையின் பசுமைக் காலநிலை நிதியம் நிதி உதவி அறிவித்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை முன்பே கண்டறியும் எச்சரிக்கை கருவி இருந்தால் பெரும் சேதங்களை நிச்சயமாக தவிர்க்க முடியும். இந்த பெருவெள்ளத்தை நேபாளத்தில் உள்ள ஊடகங்கள் "இமாலய சுனாமி" என்று பதிவு செய்திருக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/others/thalayangam/himalayan-tsunami




