சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, "அப்பாவைக் காணோம் எனப் பேசுகிறீர்களே. மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், நான் முதல்வன் என திட்டங்களில் பலனடைந்த மக்களின் மனங்களில் எங்களின் தலைவர் வாழ்கிறார். ரகுபதி அண்ணன் சீர் திட்டத்துக்கு 812 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறீர்கள். மூவலூர் ராமாமிர்தம் அம்மையர் திட்டத்தின் கீழ் மட்டுமே ஆண்டுக்கு 1 லட்சம் பெண்கள் எங்கள் ஆட்சியில் பயனடைந்தார்கள். இப்போது எல்லா திருமணமாகும் பெண்களுக்கும் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை என்றால் தலைக்கு 1 லட்சம் ரூபாய் செலவாகும். ஆக, ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் இல்லாமல் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது" என்று கூறினார். அதற்கு பதில் கொடுத்த நிதியமைச்சர் மரிய வில்சன், "மகளிர் உரிமைத் தொகையில் உங்கள் தலைவர் இருக்கிறார் என்கிறீர்கள். அதுமட்டுமல்ல, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் 1,28,000 ரூபாய் கடன் சுமையை ஏற்றியதும் உங்கள் தலைவர்தான்" என்று கூற, தவெக எம்எல்ஏக்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர். மரிய வில்சன் தவிர சட்டமன்றத்தில் பேசிய கே.என்.நேரு, "நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு நிதித்துறை செயலாளர் பேசினார். 50 ஆண்டுகள் ஆனாலும் கடன் வாங்குவதை நிறுத்த முடியாது என்கிறார். நீங்கள்கூட ஆட்சிக்கு வந்த 60 நாள்களில் 20,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறீர்கள். நாங்கள் இதைக் குற்றமாகச் சொல்லவில்லை. ஒரு அரசு கடன் வாங்கிதான் செயல்பட முடியும். ரிசர்வ் வங்கி அனுமதித்தால் மட்டுமே கடன் வாங்க முடியும். உரிய வருவாய் இருந்தால் மட்டுமே ரிசர்வ் வங்கி கடன் வாங்க அனுமதி கொடுக்கும். ஆக, எவ்வளவு கடன் வாங்கினோம் என்று பார்க்கக் கூடாது. எவ்வளவு திட்டங்களை அமல்படுத்தினோம் என்றே பார்க்க வேண்டும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/tvk-marie-wilson-responds-to-dmk-regupathy




