புதுடெல்லி, பெருநகரங்களில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை, 3 நட்சத்திர ஓட்டல் அறையின் அடிப்படை கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது. முறைப்படுத்த வேண்டும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 176-வது அறிக்கை மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த 7-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 'தனியார் மற்றும் பொதுத்துறையில், சுகாதார வசதிகள் எளிதாக அணுகும் வகையில் இருக்கிறதா? மலிவாக கிடைக்கிறதா?' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை கட்டணத்தை உடனடியாக முறைப்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பெருநகரங்களில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை கட்டணம், 3 நட்சத்திர ஓட்டலின் அடிப்படை அறை கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. அடிப்படை அறை வாடகையுடன் மருத்துவருக்கான கட்டணம், நர்சிங் சேவைகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய மருத்துவ பொருட்கள், உணவு மற்றும் சலவை கட்டணத்தை சேர்த்துக் கொள்ளலாம். தனி ஆலோசகர் நியமிக்க வேண்டும் சிக்கலான அல்லது நீண்ட கால சிகிச்சைகளை தொடங்கும் முன்பே, அதற்கான முழு செலவு குறித்த விவரத்தையும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் கட்டாயம் வழங்க வேண்டும். சிகிச்சைக்கான செலவு, காப்பீட்டு வரம்பு, கிடைக்கக்கூடிய நிதியுதவிகள் குறித்து நோயாளிகளின் குடும்பத்தினரிடம் விளக்க மருத்துவமனைகளில் தனி ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு சராசரியாக ரூ.34,064 வரை குடும்பத்தினர் சொந்த பணத்தை செலவழிக்க நேரிடுகிறது. இதன் காரணமாக மருத்துவ செலவுகள் அதிகரிப்பதால், இத்துறையில் ஆண்டுக்கு 10 - 13 சதவீதம் வரை பணவீக்கம் உயர்கிறது. தேசிய சுகாதார நிதியம் புற்றுநோய் மற்றும் மரபியல் நோய்கள் போன்ற அதிக செலவு பிடிக்கும் சிகிச்சைகளுக்கு உதவ கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., எனப்படும், சமூக நிதி பங்களிப்புகளை ஒருங்கிணைத்து, தனியாக தேசிய சுகாதார நிதியம் உருவாக்கப்பட வேண்டும். முன்கூட்டியே நோய் கண்டறிதல் பரிசோதனை, சிகிச்சை, மறுவாழ்வு மையம் மற்றும் வாழ்நாள் இறுதி வரை சுகாதார பராமரிப்பு என அனைத்து சேவைகளையும் உள்ளடக்கிய ஒற்றை கட்டணப் பொதியை நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் சுகாதார கட்டமைப்புகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/hospital-room-rent-must-not-exceed-3-star-hotel-fee-parliamentary-panel




