திருநெல்வேலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- பட்டமளிப்பு விழா திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு கவர்னர் பங்கேற்கிறார். எனவே, இந்நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என்று கவர்னர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படியே இந்நிகழ்ச்சி நடைபெறும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது. இது மாநில உரிமை மற்றும் மாநில மொழியின் மீது நடைபெறுகிற அத்துமீறலாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. கவர்னர் தலையீடு கவர்னர் பங்கேற்கிறார் என்பதற்காகவே ஒரு மாநிலத்தின் மாநிலப் பாடலை பின் வரிசைக்கு தள்ளுவது ஏற்புடையதல்ல. மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரு பல்கலைக்கழகத்தில் மாநிலப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு ஆகும். இந்நிலையில் கவர்னர் அலுவலக சுற்றறிக்கை விரும்பத்தகாத சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது அநீதியானது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்குகிற ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாவது இடம் என்பது அவருக்கு இழைக்கப்படுகிற அவமரியாதையாகும். மேலும் வந்தே மாதரம் பாடலின் சில வரிகள் பாடப்படுவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே, வந்தே மாதரம் பாடலின் ஆட்சேபணையற்ற வரிகள் மட்டுமே பாடப்பட வேண்டும். கவர்னரின் சுற்றறிக்கை திரும்பபெறப்பட வேண்டும். கவர்னர் அலுவலக சுற்றறிக்கையின்படி நடக்காவிட்டால் தன்மீது நடவடிக்கை வரும் என்று துணைவேந்தர் கூறியிருப்பதிலிருந்தே கவர்னர் மாநில நிர்வாகத்தில் தேவையற்ற தலையீடுகள் செய்து மிரட்டலில் ஈடுபடுகிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. கவர்னர் அலுவலகத்தின் அத்துமீறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முதலிடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து எனவே, எவ்வித நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். அதன் பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக வந்தே மாதரத்தின் ஆட்சேபணையற்ற வரிகள் மட்டுமே பாடப்படும் வகையில் பட்டமளிப்பு விழா நடைபெற வேண்டுமென்றும் இந்த அடிப்படையில் பட்டமளிப்பு விழா நடைபெறுவதை மாநில அரசு உறுதி செய்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிற மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும், பன்முகப் பாரம்பரியத்துக்கும் எதிரான வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டுமென்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டாய சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-convocation-ceremony-tamil-thai-vazhthu-3rd-place-marxist-party-condemns




