புதுடெல்லி எம்.பி.க்கள் கூட்டத்தில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பிரதமர் மோடி கூறிய விசயங்களை பற்றி மத்திய மந்திரி ரிஜிஜு பகிர்ந்து கொண்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும், நேற்றைய கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. 2-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் இன்றும் முடங்கின. பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. எம்.பி.க்கள் கூட்டம் இந்த சூழலில், கூட்டத்தொடருக்கு முன்பு, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில், மங்கள் மிலன் என்ற பெயரில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களின் கூட்டம் இன்று காலை நடந்தது. இதற்காக நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள ஜி.எம்.சி. பாலயோகி கூட்ட அரங்கில் கூட்டம் நடந்தது. மத்திய மந்திரிகள் கூட்டத்தில், பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபீன், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல முக்கிய மசோதாக்கள் மற்றும் நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சிகளின் அமளியை எதிர்கொள்வது ஆகியவை பற்றி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வினாத்தாள் கசிவு விவகாரம் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு, பிரதமர் மோடி கூட்டத்தில் கூறிய விசயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறும்போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், அதற்கு பொறுப்பானவர்களுக்கு, கடுமையான சாத்தியப்பட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். வினாத்தாள் கசிவுகளை தடுக்க வேண்டியது என்பது தேச அளவிலான, பொறுப்புணர்வு கொண்ட விசயம் என்று கூறினார். தேர்வு நடைமுறையில் முறைகேடு நடைபெறாத வகையிலான கட்டமைப்பை உருவாக்க கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்போது வலியுறுத்தினார். எம்.பி.க்களின் பொறுப்பு இதேபோன்று, அவையில் அலுவல்கள் சீராக நடைபெற கூட்டணி கட்சியினர் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியதுடன், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ முறையில் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அரசியல் வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் நலனிற்காக பகிரப்பட்ட பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டிய பொறுப்பு, அனைத்து எம்.பி.க்களுக்கும் உள்ளது என பிரதமர் கூறினார் என்று மத்திய மந்திரி ரிஜிஜு கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/neet-exam-question-paper-leak-what-pm-modi-told-nda-mps-meeting




