புதுடெல்லி, மத்திய அரசிடம் கையிருப்பில் உள்ள வெங்காயம், 30 சதவீதம் அழுகிவிட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மத்திய அரசிடம் கையிருப்பில் உள்ள வெங்காயம் நல்ல தரத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகாரத்துறை செயலர் நிதி கரே கூறியதாவது: "இந்த ஆண்டு முதல்முறையாக சி.டபிள்யு.சி., எனப்படும் மத்திய கிடங்கு கழகத்தின் வாயிலாக சேமித்து வருவதால் வெங்காயத்தை அதிக நாட்கள் தரம் குறையாமல் பாதுகாக்க முடிகிறது. அரசிடம் தற்போது 1.21 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பு உள்ளது. இதில் 30 சதவீதம் அழுகிவிட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை, உண்மைக்கு புறம்பானவை. கடந்த ஆண்டுகளில் வெங்காய இருப்பு வியாபாரிகளிடம் சேமிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் சேமிக்கும் பொறுப்பு சி.டபிள்யு.சி.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெங்காயம் கையிருப்பின் தரம் மூன்றாம் தரப்பு நிறுவனம் வாயிலாக பரிசோ திக்கப்படுகிறது. வெங்காயத்தில் 90 சத வீதம் தண்ணீர் உள்ளது. அறுவடைக்கு பின் மூன்று மாதங்கள் வரை அதன் தரம் பெரும்பாலும் பாதிக்கப்படாமல் இருக்கும். அதன் பிறகு, தண்ணீர் ஆவியாகி வெளியேறுவதால் மாதத்தோறும் வெங்காயம் சுருங்க தொடங்கும். சேமிப்பு நிலை மற்றும் காற்றோட்டத்தை பொறுத்தே அழுகும் அளவு மாறுபடும். கடந்த ஜூன் - ஜூலை மாதங்களில் கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் தான் கையிருப்பில் பெருமளவு உள்ளது. இதனால் தற்போது வெங்காயத்தின் தரம் நன்றாக உள்ளது. அரசின் வெங்காயம் கையிருப்பு, 'கந்தா எக்ஸ்பிரஸ்' என்ற பிரத்யேக சரக்கு ரயில் வாயிலாக சென்னை, மதுரை, டெல்லி, எர்ணாகுளம் மற்றும் கவுஹாத்திக்கு மொத்தமாக அனுப்பப்பட்டு வருகிறது." இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/stock-of-quality-onions-available-central-government




