மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கமிஷனராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் எடுத்து வரும் நடவடிக்கைகளால் உணவகங்கள், உணவுப்பொருள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. மும்பையில் பிரபல உணவு செயின் நிறுவனமான மெக்டொனால்டு கடை சுத்தமாக இல்லை என்று அதன் லைசென்ஸை துகாராம் முண்டே சஸ்பெண்ட் செய்தார். இதே போன்று பல உணவகங்களின் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு புனேயில் உள்ள மருந்து தயாரிக்கும் சிப்லா நிறுவனம் சரியாக விதிகளை பின்பற்றவில்லை என்று அந்நிறுவனத்தை மூடினார். இது போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளால் துகாராம் முண்டேயின் பெயரைக் கேட்டாலே அனைத்து நிறுவனங்களும் அச்சம் அடைந்துள்ளன. மும்பை கிரிக்கெட் அசோசியேசனில் இருந்த உணவகம், மும்பை ஐ.ஐ.டி வளாகத்தில் இருந்த கேண்டீன்களையும் மூட முண்டே உத்தரவிட்டார். மும்பை உயர்நீதிமன்றம் மும்பை பாந்திராவில் உள்ள மும்பை கிரிக்கெட் அசோசியேசனில் இருந்த 5 ரெஸ்டாரண்ட்கள் சரியாக விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி அதன் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதை எதிர்த்து மும்பை கிரிக்கெட் அசோசியேசன் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. கடந்த 25ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு புதிய ஆய்வு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். மும்பை கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் உணவகங்கள் மற்றும் கேட்டரிங் சேவையை நடத்தும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் தனியுரிமையை கவனத்தில் கொண்டு நடைமுறைக்கு சாத்தியமான நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அறிக்கைகளில் 88% உரிம விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது என்று மும்பை கிரிக்கெட் அசோசியேசனில் உணவகங்களை நடத்தும் ஷிர்கே இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சரின் மூத்த வழக்கறிஞர் வினீத் நாயக் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதோடு மும்பை கிரிக்கெட் அசோசியேசன் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ஆர். தோண்ட்,'' உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உணவகங்களின் லைசென்ஸை சஸ்பெண்ட் செய்ய இப்போது எந்த காரணமும் இல்லை என்று" தெரிவித்தார். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மும்பை கிரிக்கெட் அசோசியேசன் மனு மீதான தங்களது முந்தைய உத்தரவைப் பின்பற்றாததற்காக, நீதிமன்ற அவமதிப்புக்காக விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்படும் என உணவு மற்றும் மருந்து நிர்வாகதுறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து உணவு மற்றும் மருந்து ஆணையம் தனது நோட்டீஸை திரும்பப் பெற முன்வந்தது. எனவே பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள மும்பை கிரிக்கெட் அசோசியேசனில் செயல்படும் ஐந்து உணவகங்களின் உரிமங்கள் மீதான சஸ்பெண்டை ரத்து செய்தது. "இது (இடைநீக்கத்தை ரத்து செய்வது) கிட்டத்தட்ட அனைத்து வழக்குகளிலும் நடக்கிறது," என்று தலைமை நீதிபதி ஆர்.வி. குகே மற்றும் நீதிபதி கௌதம் அன்காட் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு கூறியது. அதோடு சஸ்பெண்ட் உத்தரவை வழங்கிய அதிகாரியின் பெயரை நீதிபதிகள் கேட்டனர். "நீதிமன்ற உத்தரவு உங்களுக்கு ஒன்றும் புரியவில்லையா? உயர் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பு இல்லையா?'' என்று தலைமை நீதிபதி கேட்டார். மேலும், "நீங்கள் (FDA) என்ன கடவுளா. எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?" என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முன்னதாக புனேயில் உள்ள சிப்லா பார்மா அண்ட் லைஃப் சயின்சஸ் லிமிடெட் நிறுவனத்தின் மருந்து விற்பனை உரிமத்தை ரத்து செய்த உத்தரவை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை திரும்பப் பெற்றது. இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை வரம்பு மீறி செயல்பட்டதாகவும், அதிகாரத் தோரணையில் நடந்துகொண்டதாக பொறுப்பு தலைமை நீதிபதி ரவீந்திர குகே மற்றும் நீதிபதி கௌதம் அங்கத் ஆகியோர் அடங்கிய அமர்வு கடுமையாக விமர்சித்து இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/trending/are-you-god-to-do-whatever-you-please-high-court-questions-maharashtra-food-commissioner-munde




