புதுடெல்லி, 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், கடந்த 20-ந்தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை பெரிதாக எடுத்தன. காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மோடி அரசு மாணவர்களை தேசத்தின் எதிரிகள் போல் நடத்துகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது;- “நம்பிக்கையற்ற சூழலை மட்டுமே உருவாக்கும் இன்றைய கல்விச் சூழல் மற்றும் மோடி அரசின் இயல்பான ஆணவம், பொறுப்பற்ற அணுகுமுறையை ஆகியவற்றின் இயல்பான விளைவே இந்த மாணவர் போராட்டங்கள். மோடி அரசு இந்தியாவின் கல்விச் சூழலை சீரழித்து வருகிறது. மோடி அரசின் உண்மை முகத்தை நாட்டின் மாணவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். மாணவர்களுடன் துணை நின்று அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது ஒரு தார்மீக, அரசியல் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த கடமையாகும். மாணவர்கள் பொறுப்புக்கூறலையும், கல்வி சீர்திருத்தங்களையும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் மோடி கோழைத்தனத்துடன், கொடும் தாக்குதலை நிகழ்த்தி மாணவர்களுக்கு பதிலளித்துள்ளது. அவர்களை எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல், தேசத்தின் எதிரிகளைப் போல் நடத்துகிறது. 2020-ம் ஆண்டு குடியுரிமை(திருத்த) சட்டம் - தேசிய குடிமக்கள் பதிவேடு போராட்டங்களின்போது, ஆயுதமேந்திய காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பல்கலைக்கழக வளாகங்களை எவ்வாறு சூறையாடினர் என்பது எங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்தியாவின் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல்களை நம் நினைவுகளில் இருந்து ஒருபோதும் அழிக்க முடியாது. பெல்லட் குண்டுகளால் (pellets) உடல் சிதைக்கப்பட்ட இளைஞர்களின் மிகவும் வேதனையான காட்சிகளை நாடு கண்டுள்ளது. இத்தகைய குண்டுகளின் பயன்பாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே ஒப்புதல் அளித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அன்றைய தினம் பதிவான காணொளிகள் நம் நினைவுகளில் ஆழமாகப் பதிந்து, நம் கூட்டு மனசாட்சியை உலுக்கியுள்ளன. தன்னிச்சையாக எழுந்த இந்தப் போராட்டத்தைப் பற்றி, அரசாங்கமும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் தவறான கதைகளை பரப்பி வருகின்றன. இப்போது நாம் உரத்த குரலில், "நிறுத்துங்கள்; இவர்கள் நம் மகன்கள் மற்றும் மகள்கள், நம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள்” என்று சொல்ல வேண்டிய நேரம் இது. விவசாயிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை அனைவரிடமும் இத்தகைய அடக்குமுறைப் போக்கு வெளிப்படுவதை நாம் காண்கிறோம். ஆனால் சர்வாதிகார ஆட்சிக்கு ஒரு புதிய இலக்கணத்தையே வகுத்துள்ள இந்த உணர்வற்ற அரசாங்கம், இந்த வாரம் இன்னும் மோசமான நிலைக்குத் தரம் தாழ்ந்துவிட்டது. எதிர்கால மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பவர்கள் ஆகியோரிடம் புரிதலுடன் அணுகுவதற்குப் பதிலாக, அவர்கள் மீது அரசின் அடக்குமுறை அதிகாரத்தை ஏவிவிட்டது. இதை மன்னிக்கவோ அல்லது மறக்கவோ முடியாது. கடந்த 12 ஆண்டுகளில், மோடி அரசாங்கம் சுமார் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகளை மூடியுள்ளது; அதே வேளையில் 43,000 தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பகுதி பள்ளிகள் 'ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்' (RSS) அமைப்பால் நடத்தப்படுபவை. அந்த அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் இணைந்துதான் இந்தியாவில் மிகப்பெரிய தனியார் பள்ளி வலையமைப்பை நிர்வகித்து வருகின்றன. 'நீட்' (NEET) தேர்வுக்கான பயிற்சிக்கு மட்டும் குடும்பங்கள் செலவிடும் மொத்த தொகையானது, பொது கல்விக்காக மோடி அரசாங்கம் செய்யும் மொத்த முதலீட்டிற்கு இணையானதாகும். தேசியத் தேர்வுகள் முகமை (NTA) என்பது போதுமான பணியாளர்கள் இல்லாத, ஒரு பலவீனமான அமைப்பாகும். இது தேர்வுகளை நடத்துவதற்குத் தனியார் ஒப்பந்ததாரர்களையே முழுமையாக சார்ந்திருக்கிறது. தேசிய தேர்வு முகமையால் பணியமர்த்தப்படும் வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர்கள் அல்ல என்பதும், அவர்களில் பெரும்பாலோர் அரசியல் தொடர்புகள் கொண்ட சாதாரண தகுதி கொண்ட நபர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த செயல்முறையின் விளைவுகள் மிகக் கடுமையானதாக அமைந்துள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இதில் 2017-ல் NTA உருவாக்கப்பட்டதில் இருந்து மட்டும் 9 முறை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன. இறுதியில், பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதும், கல்வி குறித்த நேர்மையான உரையாடல்களை தவிர்ப்பதுமே மோடி அரசாங்கத்தின் தொடர்ச்சியான மற்றும் திட்டமிட்ட கொள்கையாக இருந்து வருகிறது. NTA-வை வலுப்படுத்துவது குறித்த நாடாளுமன்ற கல்வி நிலைக்குழுவின் பரிந்துரைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர் என்ற ஒரே காரணத்திற்காக, அப்பரிந்துரைகளை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பொதுவெளியில் நிராகரித்துள்ளார். இத்தகைய பெரும் தோல்விகள் நிகழ்ந்த போதிலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுப்பது, பொதுமக்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/modi-government-treats-students-like-enemies-of-the-nation-sonia-gandhi




