சென்னை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 10-வது தமிழ் நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட ஆட்டங்கள் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.ஆர்.பி. கல்லூரி மைதானத்திலும், 2-வது கட்ட ஆட்டங்கள் ஆகஸ்டு 18-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது. இந்த நிலையில் டி.என்.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அரங்கில் நேற்று மாலை நடந்தது. மொத்தம் 783 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர். அதில் இருந்து 57 வீரர்கள் ஏலம் போனார்கள். அதிகபட்சமாக சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அஷ்வந்த் வல்தபா ரூ.14.45 லட்சத்துக்கு ஏலம் போனார். அவரை 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வசப்படுத்தியது. டி.என்.பி.எல். ஏலத்திற்கு பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கூறியதாவது:- மூத்த வீரர்கள் விஜய் சங்கர், பாபா அபராஜித் ஆகிய இருவர் இந்த முறை எங்கள் அணியில் இல்லை. அவர்கள் இல்லாதது எங்களுக்கு இழப்பு தான். என்றாலும் எங்களிடம் இருந்த இருப்பு தொகையை கொண்டு சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளோம். தற்போது அணி சரியான கலவையில் வலிமையாக அமைந்துள்ளது. அனைத்து வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தினால் நிச்சயம் கோப்பையை வெல்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு உண்டு. எப்போதுமே சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சிறப்பாக செயல்படும். இந்த முறையும் அத்தகைய முயற்சி தொடரும். இந்த ஏலத்தில் முகிலேஷ், அஷ்வந்த் வல்தபா ஆகியோரை வாங்குவதற்கு ஆர்வமாக இருந்தோம். அதில் ஒருவரை எடுத்தது மகிழ்ச்சி.வல்தபா எளிதில் கணிக்க முடியாத வகையில் சுழற்பந்து வீசக்கூடியவர். தமிழ்நாட்டில் இது போன்ற வெற்றிகரமான பவுலராக வருண் சக்ரவர்த்தி உள்ளார். அவரை போன்ற இவரையும் உருவாக்க முயற்சிப்போம்.இந்த முறை டி.என்.பி.எல். கிரிக்கெட்டை யூடியூப் சேனலிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய டி.என்.பி.எல். நிர்வாகம் எடுத்த முடிவை வரவேற்கிறேன். என்னை பொறுத்தவரை அனைவரையும் சென்றடைவதற்கு யூடியூப் அருமையான தளமாகும். கடந்த முறையை விட போட்டியை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். அணியில் நீடிக்க வேண்டுமா அல்லது விடுவிக்கப்பட வேண்டுமா என்பதை முடிவு எடுக்கும் உரிமை வீரர்களுக்கும் இருக்க வேண்டும். அணியில் நீடிப்பது தொடர்பாக அவர்களின் ஒப்புதல் வேண்டும். இப்போது அணி நிர்வாகம் தான், வீரர்களுக்கான தக்கவைக்கும் முடிவை எடுக்கிறது. இதனால் சில நேரம் வீரர்கள் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்த முடியாமல் இழப்புகளை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் மீண்டும் ஏலத்திற்கு வந்தால் அதிக தொகையை சம்பாதிக்க முடியும். இந்த விஷயத்தில் மாற்றம் வர வேண்டும்.இதற்காக நான் எப்போதும் போராடுகிறேன். அதை தொடர்ந்து செய்வேன். என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/chepauk-super-gillies-team-is-strong-owner-b-sivanthi-adityans-statement




