திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. பிள்ளையார்பட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வாகனங்களில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். 6-ம் நாள் விழாவான நேற்று மாலையில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. முன்னதாக உற்சவர் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மூலவரிடம் சூரனை வதம் செய்ய யானை தந்தத்துடன் உத்தரவு பெற்ற பின்னர் வீதி உலா வந்தார். அதைத்தொடர்ந்து சூரனை சுவாமி வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டம் 7-ம் நாள் விழாவான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மயில் வாகனத்திலும், நாளை(சனிக்கிழமை) 8-ம் நாள் குதிரை வாகனத்திலும் விநாயகர் வீதி உலா வருகிறார். 9-ம் நாளான 13-ந்தேதி மாலையில் கற்பக விநாயகர் தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக ஆண்டுக்கு ஒரு முறை மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனக் காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளிக்கிறார். 10-ம் நாளான விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் திருக்குளம் முன்பு எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையலும், இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. அத்துடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கோனாப்பட்டு ராமசாமி செட்டியார், அரிமளம் கண்ணன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/vinayagar-chaturthi-festival-soorasamharam-at-pillaiyarpatti-temple




