சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய நிலையில், நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திற்குள் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் வராத நிலையில், அரைகுறை அறிவு ஜீவிகள் வழங்கிய ஆலோசனையின்படி அவசரகதியில் தவெக அரசு எடுத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரக்கூடிய தவறான முடிவால் இன்று விவசாயி ஒருவரின் உயிர் பறிபோய் அவரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கவர்னர் உரைக்கு பின் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் உரையில், விவசாயிகளுக்காக இந்த அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத சிலரின் தூண்டுதலால்தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்ற கருத்தை முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் ஏற்ற இறக்கத்துடன் பதிவு செய்தார். ஆனால், தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, அதை "மற்றவர்களின் தூண்டுதல்" என்ற போர்வைக்குள் அடக்கிப் பார்க்காமல், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் நியாயமான கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட்டு உடனடியாக அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் பிற கட்சிகளை வெட்டி, ஒட்டி ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசு, எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சிகளாகப் பார்க்காமல் அவர்கள் முன்வைக்கும் கருத்துகளையும், சுட்டிக்காட்டும் பிரச்சினைகளையும் சரியான பார்வையில் அணுகி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க இனியாவது முன்வர வேண்டும். எனவே, மக்களை ஏமாற்றியே ஆட்சியை நடத்திவிடலாம் என்ற தங்களின் அதிமேதாவித் தனத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதோடு, உயிரிழந்த விவசாயி சோமசுந்தரம் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டை உடனடியாக வழங்கவும், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-should-come-forward-to-carry-out-constructive-politics-ttv-dhinakaran




