சென்னை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் வரவேற்பு இன்று (31.08.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க. விக்னேஷ் வெளியிட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்கான பல்வேறு நல அறிவிப்புகளைத் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. டாஸ்மாக் பணியாளர்கள் நீண்டகாலமாகப் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் முக்கியமான முன்னேற்றமாகும். அதன்படி, 01.09.2026 முதல் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 என ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.486.90 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரவேற்கத்தக்கவை மேலும், பணியாளர்களுக்கு ரூ.20,000 பண்டிகை முன்பணம், ஆண்டுதோறும் மூன்று சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவாக ரூ.6,000, சுழற்சி முறையில் 8 மணி நேரப் பணி, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. டாஸ்மாக் கடைகளில் தூய்மைப் பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்காக மாநகரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மாதம் ரூ.5,000, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.4,000, கிராமப்புறங்களில் ரூ.3,000 வழங்கப்படும் என்பதும், தகுதியுடைய 250 டாஸ்மாக் பணியாளர்களைச் சிறப்புத் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கவை. பணியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளில் சிலவற்றிற்குத் தீர்வு காணும் வகையில் இன்றைய அறிவிப்புகள் வெளியாகியிருப்பது பாராட்டுக்குரியது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்-அமைச்சர் விஜய்க்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க. விக்னேஷுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் அதேவேளையில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் டாஸ்மாக் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60-ஆக உயர்த்துதல் உள்ளிட்ட இன்னும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்து விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் உள்ளிட்ட நடைமுறைகளால் பணியாளர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையோ செலவினச் சுமையோ ஏற்படாத வகையில், தேவையான நிர்வாக நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் வலியுறுத்துகிறது. தொழிலாளர்களின் உரிமை மற்றும் நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆதரிப்பதுடன், நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கும் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் எனத் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/welfare-announcements-for-tasmac-employees-workers-rights-association-welcomes-the-move




