பெரியகுளத்திலிருந்து தேனி செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது தாமரைக்குளம் என்னும் ஊர். இங்குள்ள அழகுமலையான் திருக்கோயில் மிகவும் சிறப்பானது. இந்த ஆலயத்தின் தலவரலாறு சொல்லும் தகவல்கள் மிகவும் சிறப்பானது.
இந்த அழகுமலையானுக்கு தாமரைகளைச் சமர்ப்பித்து பாலபிஷேகம் செய்து வழிபட்டால், பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள். இத்தனை சிறப்புகள் கொண்ட அழகுமலையான் யார்? அவர் இங்கே கோயில்கொண்டது எப்படி என்பது குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள்.
முன்னொருகாலத்தில் இந்தப் பகுதி மக்கள் திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலையில் இருக்கும் அழகரை வழிபட்டு வந்தனர். அவரே இப்பகுதி மக்களின் குலதெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் விளங்கினார்.
தாமரைக்குளம் அழகுமலையான்
ஓவ்வொருமுறையும் தங்கள் ஊரிலிருந்து தொலைவில் இருந்த அழகர்மலைக்கு வெகு சிரமத்தோடு சென்று வந்தார்கள். இதைத் தவிர்க்க என்ன செய்வது என்கிற யோசனையில் ஆழ்ந்தவர்கள் பெரியவர்களின் ஆலோசனைப்படி கோயில்களிலிருந்து ‘பிடிமண்’ எடுத்து வந்து, தாங்கள் வசிக்கும் ஊரிலேயே ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.
அப்படி ஒரு கோயில்தான் தாமரைக்குளத்தில் உள்ள அருள்மிகு அழகுமலையான் திருக்கோயில். அழகர்கோயில் பெருமாளும் தான் இஷ்டமுடன் அங்கே வந்து கோயில்கொள்வதாகக் குறி சொல்ல ஊர் மக்கள் பக்தியோடு வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்: வினைகள் தீர்க்கும் விஸ்வரூப ஆஞ்சநேயர் சந்நிதி!
இந்த ஊரில் பெரிய ‘தாமரைக்குளம்’ இருக்கிறது. தாமரைகள் நிறைந்து எழிலுற காட்சியளிக்கும் இந்தக் குளத்தின் பெயரே ஊருக்கும் அமைந்துவிட்டது. அழகு பொலியத் திகழும் கோயிலில், கர்ப்பக்கிரகத்தில் ச்ரிதேவி பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் அழகுமலையான்.
அவருக்கு இடப்புறம் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமிக்கும் இடப்புறம் இருவாஞ்சி அம்மனுக்கும் தனித்தனியே சந்நிதி அமைந்துள்ளது. மேலும் ஆலய வளாகத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
தாமரைக்குளம் அழகுமலையான் திருக்கோயில்
சித்ரா பெளர்ணமித் திருவிழா இங்கு விசேஷம். அப்போது கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைபவம் போல் இங்கேயும் ஒரு வைபவம் நடக்கும். சுவாமிக்கான பூஜைப்பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி, தாமரைக் குளத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே அந்த சாமிப்பெட்டிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
அப்போது கள்ளழகர் உலாவில் நடப்பதுபோலவே, பக்தர்கள் திரிஎடுத்து ஆடி வருவதும், அரிவாள் மீதேறி கருப்பண்ண சுவாமி குறிசொல்லும் வைபவமும் நடக்கும். மறுநாள் பக்தர்கள் சுவாமிக்குப் பொங்கல் வைப்பார்கள். முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபடுவார்கள்.
ஆடிமாதம் பதினெட்டாம் பெருக்கு அன்றும் சுவாமியின் பெட்டி, தாமரைக்குளத்துக்குச் சென்று வரும். அன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் உண்டு. மறுநாள் பக்தர்கள் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு, ஆட்டுக்கிடா நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இருவாஞ்சி அம்மனுக்கும் பட்சணம், பலகாரங்கள் படைக்கும் வைபவம், சந்தனக் குடம் எடுக்கும் வைபவம் ஆகியன விசேஷமாக நடைபெறும்.
தேனி மாவட்டம் தீர்த்தத்தொட்டி விருப்பாட்சி ஆறுமுகநயினார் திருக்கோயில்: நாக தோஷம் தீர்க்கும் சந்நிதி!
இந்த இரண்டு விழாக்களின்போதும் இவ்வூர் மக்கள் தாங்கள் எந்த ஊரில் வசித்தாலும் தாமரைக்குளத்துக்கு வந்துவிடுவார்கள். அன்னதானம், விழாக் கொண்டாட்டம் என்று ஊரே களைகட்டும். மதுரை கள்ளழகர் கோயிலுக்கு நேர்ந்து கொண்டு, சூழல் காரணமாக அங்கு செல்ல முடியாத அன்பர்களும் அழகுமலையான் ஆலயத்தில் அந்தப் பிரார்த்தனைகளைச் செய்வது உண்டு.
புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி தனுர் மாத பூஜை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது அலங்காரப் பிரியனான அழகுமலையானுக்குப் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். சுவாமிக்குத் தாமரை மலர்கள் படைத்து, விளக்கு ஏற்றி, பாலபிஷேகம் செய்து வழிபட் டால் தங்களின் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தாமரைக்குளம் அழகுமலையான் திருக்கோயில் கருப்பண்ணசாமி
அதேபோல், தாமரைத் தண்டில் திரி எடுத்து, அதைக்கொண்டு இந்தப் பெருமாளுக்குத் தீபம் ஏற்றி வழிபடுவதால் பித்ருதோஷம், முன்னோர் கோபம் ஆகியவை நீங்கும் என்கிறார்கள்.
மட்டுமன்றி மனச்சங்கடங்கள், குடும்பத்தில் பிரச்னை, பொருளா தாரத்தில் சிக்கல் - கடன் பிரச்னைகள் போன்றவை விலகவும், நீண்ட நாட்களாக தடைபட்டிக்கும் திருமணம் போன்ற சுபகாரியங்கள் விரைவில் நடக்கவும், குழந்தைப்பேறு வாய்க்கவும், ஆரோக்கியம் வேண்ட்யும், தொழில் சிறக்கவும் இந்தப் பிரார்த்தனையைச் செய்து அழகுமலையானை வழிபடுகிறார்கள்.
அழகுமலையானும் தன்னைநாடி வந்து வணங்கி வழிபடும் அவர்களின் இன்னல்களைக் களைந்து இன்பவாழ்வை வரமாக அருள்கிறார். இதற்கு, அனுதினமும் அவரின் சந்நிதிக்கு வரும் பக்தர்கள் கூட்டமே சாட்சி என்கிறார்கள் உள்ளூர் மக்கள். நீங்களும் ஒருமுறை குடும்பத்தோடு சென்று அழகுமலையானை வழிபட்டு வரம்பெற்று வாருங்களேன்.
சிவகங்கை மாவட்டம், கீழக்கோட்டை ஆதினமிளகி ஐயனார் கோயில்: கவலைகள் தீரும்... உணவுப் பஞ்சம் ஏற்படாது
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
🇮🇳Vikatan