சென்னை, பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை மந்திரி முரளிதர் மோஹோல் அளித்த பதில் பின்வருமாறு;- கேள்வி: சென்னை, பரந்தூரில் முன்மொழியப்பட்டுள்ள பசுமை வழி விமான நிலையத்தின் தற்போதைய நிலை, கட்டம் வாரியான முன்னேற்றம், மொத்த மதிப்பிடப்பட்ட திட்டச் செலவு, இதுவரை ஒதுக்கப்பட்ட வரவு-செலவு நிதி மற்றும் அதை முடிப்பதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு ஆகிய விவரங்கள்; தருக. பதில்: பரந்தூரில் சர்வதேச பசுமை வழி விமான நிலையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசின் நிறுவனமான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 07.04.2025 அன்று 'கொள்கை அளவிலான' ஒப்புதலை வழங்கியுள்ளது. செப்டம்பர் 2024-இல் TIDCO சமர்ப்பித்த கொள்கை அளவிலான விண்ணப்பத்தின்படி, கட்டம்-1க்கான மதிப்பிடப்பட்ட திட்டச் செலவு தோராயமாக ரூ. 10,500 கோடி ஆகும். பசுமை வழி விமான நிலையக் கொள்கை, 2008-இன் படி, நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு, நிதி திரட்டுதல், சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுதல் உள்ளிட்ட பசுமைப் புல விமான நிலையத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட விமான நிலைய உருவாக்குநர் அல்லது மாநில அரசைச் சேர்ந்ததாகும். விமான நிலையத் திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு நிலம் கையகப்படுத்துதல், கட்டாய அனுமதிகள் கிடைப்பது, நிதி நிருவாக முடிவு போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. கேள்வி: பசுமைப் வழி விமான நிலையத்திற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு புதிய தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதா, ஆம் எனில், அத்தகைய கோரிக்கையின் தேதி வாரியான விவரங்கள் மற்றும் அதற்கு அரசின் பதில் என்ன. பதில்: இல்லை. கேள்வி: சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை, திட்டம் வாரியான பட்ஜெட் ஒதுக்கீடு, புவியியல் மற்றும் நிதி முன்னேற்றம், எதிர்பார்க்கப்படும் நிறைவு தேதி மற்றும் பிற தொடர்புடைய விவரங்களைக் குறிப்பிடவும்? பதில்: தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்துவது/ நவீனப்படுத்துவது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் முக்கிய விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் வருமாறு: சென்னையில் ரூ. 2,467 கோடி செலவில் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் புவியியல் மற்றும் நிதி முன்னேற்றம் முறையே தோராயமாக 81% மற்றும் 71% ஆக உள்ளது. மேலும், மழைநீர் வடிகால் சீரமைப்பு (ரூ. 209.01 கோடி), முனையம் 1-ஐப் புதுப்பித்தல் (ரூ. 81.8 கோடி) மற்றும் ஏர்சைட் உட்கட்டமைப்பு மேம்பாடு (ரூ. 480.06 கோடி) போன்ற கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருச்சியில் ரூ. 80.17 கோடி செலவில் புதிய ATC கோபுரம் மற்றும் தொழில்நுட்பக் கூடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் புவியியல் மற்றும் நிதி முன்னேற்றம் முறையே தோராயமாக 76% மற்றும் 49% ஆக உள்ளது. கோயம்புத்தூரில் புதிதாகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ரூ. 51.31 கோடி செலவில் சுற்றடைப்புச் சுவர் கட்டுதல் மற்றும் ரூ. 13.71 கோடி செலவில் தற்போதுள்ள முனையக் கட்டிடத்தை விரிவாக்கம் செய்தல் மற்றும் மாற்றியமைத்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என பதில் அளிக்கப்பட்டது. தவெக அரசு பரந்தூருக்கு மாற்றாக வேறு இடம் தேர்வு செய்யப்படும் என கூறி, பரந்தூர் விமானநிலைய பணிகள் தவெக அரசால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மாற்று இடம் பற்றி மத்திய அரசிடம் எந்த கோரிக்கையுமே இதுவரை தவெக அரசு வைக்கவில்லை என்ற தகவல் வெளிவந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-central-governments-important-response




