மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களின் கல்வி குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசியிருக்கும் விதம் சர்ச்சையாகியிருக்கிறது. அமைச்சரின் உரையில் இருந்த சிக்கல் என்ன? ஏன் அந்த உரை விமர்சனமாகிறது? CTR. நிர்மல் குமார் வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் அமைச்சர் நிர்மல் குமார், ''நான்கு ஆண்டுகளாக ஒரு பெண் நீட் எழுதி நல்ல மார்க் எடுத்திருக்கிறார். ஆனால், அவருக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை. அவரை நான் வழக்கறிஞர் ஆக சொன்னேன். பொறியியல் படிப்புக்கு இப்போது மதிப்பே இல்லை. தச்சு வேலை செய்பவருக்கும் ப்ளம்பருக்கும் கூட இப்போது அதிக டிமாண்ட் இருக்கிறது. எலக்ட்ரிசியனாக ஏ.சி மெக்கானிக்காகவோ பயிற்சி பெற்று 10 ஆண்டுகள் பணி செய்தால் நீங்கள் சிறப்பான நிலையை எட்டலாம்'' எனப் பேசியிருக்கிறார். அமைச்சரின் இந்த உரையை திமுக ஐ.டி.விங் கையிலெடுத்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. எந்தப் பக்க சார்பும் இல்லாமல் பார்த்தாலும் அமைச்சரின் உரையில் அத்தனை அபத்தங்கள் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. தமிழ் சமூகம் கல்வியால் முன்னேறிய சமூகம். ஏனைய மாநிலங்களோடு தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் தமிழ்நாடு தனித்த பெருமையைப் பெறுவதற்கு அதன் கல்விச் செறிவுதான் மிக முக்கிய காரணம். CTR Nirmal Kumar - TVK காமராஜர் காலம் தொடங்கி திராவிட கட்சிகள் தொட்டு சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்போருக்கும் கல்வி சென்று சேர இங்கே இமாலய வேலை செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் பணி ஓயவில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டிய பொறுப்பு எப்போதும் இருக்கிறது. இப்படியொரு சூழலில் 'படித்தால் வேலை கிடைக்காது.' அல்லது 'விருப்பப்பட்ட படிப்பு கிடைக்கவில்லையெனில் கிடைத்ததை விருப்பப்பட்டு படி' எனப் பேசுவதெல்லாம் தன்னுடைய பதவிக்கு இருக்கும் பொறுப்பை உணராமல் பேசும் ஆபத்தான கருத்தாகவே இருக்கிறது. ஒரு மாணவியின் கல்வித் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவை தனிப்பட்ட மாணவர் பெற்றோருடைய பொறுப்பு மட்டும்தானா? கொள்கை வகுக்கும் இடத்தில் இருப்போருக்கு அதில் பொறுப்பே இல்லையா? அமைச்சரின் பேச்சு அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதைப் போலத்தான் இருக்கிறது. நான்கு முறை நீட் எழுதி நல்ல மதிப்பெண் எடுத்த மாணவிக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கவில்லையெனில், அந்த மாணவியின் பின்னணி என்னவென்பதை அறிய வேண்டும். அவர் நீட்டில் நல்ல மதிப்பெண் எடுத்து டாக்டர் ஆக முடியவில்லையெனில் அது அந்த மாணவியின் தவறா இல்லை இந்த அமைப்பின் தவறா? அந்தத் தவறுக்கு மாணவி பொறுப்பேற்க வேண்டுமா? இல்லை கொள்கை வகுக்கும் இடத்தில் இருக்கும் அரசியலர்கள் பொறுப்பேற்க வேண்டுமா? மருத்துவம் இல்லையெனில் வழக்கறிஞர் ஆகலாம் எனப் பேசினால், இன்னும் எத்தனை மாணவிகளை அப்படி வழக்கறிஞர் ஆக்குவீர்கள்? அமைச்சர் நிர்மல் குமார் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது, மதிப்பு இல்லை என்றும் அமைச்சர் பேசுகிறார். இதை நினைத்தும் மாணவர்தான் கவலைப்பட வேண்டுமா? பொறியியல் படிப்புகளுக்கு மதிப்பில்லை எனில் அது மாணவர்களின் சிந்தனையைத் தூண்டாத கல்வி முறையின் பிரச்னை. பொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காது எனில், குற்றஞ்சாட்ட வேண்டியது மாணவர்களை அல்ல. முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க தவறிய அரசுகளும் கொள்கை வகுப்பாளர்களும் எப்போதுதான் பொறுப்பை ஏற்பீர்கள்? லயோலா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமில் பெருந்திரள் கூட்டமாக நின்ற மாணவர்களை அமைச்சர் கவனிக்கவே இல்லையா? அது ஒரு அரசு சுதாரித்துக் கொள்ள வேண்டிய இடம். புதிதாக வந்திருக்கும் அரசு, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான சமிக்ஞை. அதை அரசு கவனித்திருந்தால் அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் பேசியிருக்கமாட்டார். தச்சருக்கும் ப்ளம்பருக்கும் அதிக டிமாண்ட் இருக்கிறது என அமைச்சர் நிர்மல் குமார் சொல்லும் பாய்ண்ட் யதார்த்தமானது. அதற்காக பட்டதாரிகளை ப்ளம்பர்களாகச் செல்லுங்கள் எனும் தொனியில் பேசுவது எப்படிச் சரியாக இருக்கும்? இப்போதுதான் ப்ளம்பர்களின் பிள்ளைகள் முதல் தலைமுறை பட்டதாரிகளாகப் படித்து ஏற்றம் பெற்று வருகின்றனர். அவர்களுக்கான ஏதுவான சமூக சூழலை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. மேலும், எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் தேர்வாக இருக்க வேண்டும். அது சமூக திணிப்பாக அதிகாரத்தின் திணிப்பாக இருக்கக்கூடாது. நிர்மல் குமார் கொள்கை வகுக்கும் இடத்தில் இருப்போர் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விவகாரங்களில் தங்கள் பதவியின் கனத்தையும் பொறுப்பையும் உணர்ந்து வார்த்தைகளை அவிழ்க்க வேண்டும். கரூர் பணி ஆணை ரத்து விவகாரம்: `நீதிமன்ற உத்தரவு நகல் வந்தவுடன்.'- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/should-graduates-become-plumbers-tvk-ministers-speech-sparks-debate




