சென்னை, சென்னை ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்ட 2 புதிய அம்ரித் பாரத் ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்களை தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கோவை வழித்தடங்களில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 130 கி.மீ. வேகத்தில் இயக்கம் சென்னை ஐ.சி.எப்.-ல் தற்போது வந்தே பாரத், அம்ரித் பாரத் உள்ளிட்ட பல்வேறு வகையான ரெயில்கள் தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரெயிலுக்கு இணையான வேகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் அம்ரித் பாரத் ரெயில்கள் 'புஷ்-புல்' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன. இந்த ரெயிலின் இருபுறங்களிலும் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளதால், மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை இயக்க முடியும். ஒரே நேரத்தில் 1,834 பயணிகள் பயணம் செய்யும் வகையில், 12 முன்பதிவு பெட்டிகள் உள்பட மொத்தம் 22 எல்.எச்.பி. பெட்டிகள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் இயக்க பயணிகள் கோரிக்கை இந்நிலையில், ஐ.சி.எப்.-ல் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட 2 அம்ரித் பாரத் ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்களை தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், கோவை வழித்தடத்திலும் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. ‘ஏசி’ வசதி இல்லாததால் கட்டணம் குறையும் இதுகுறித்து தெற்கு ரெயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது: நாடு முழுவதும் தற்போது 30 வழித்தடங்களில் 60 அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரெயிலுக்கு இணையான வேகம் மற்றும் வசதிகளுடன் 2 புதிய ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்களில் 12 முன்பதிவு பெட்டிகள் உள்ளன. இதில் 'ஏசி' பெட்டிகள் இடம்பெறவில்லை. இதனால் சாதாரண முன்பதிவு கட்டணத்தில் அதிகமான பயணிகள் பயணம் செய்ய முடியும். புதிய அம்ரித் பாரத் ரெயில்களை தமிழகத்துக்குள் இயக்குவது தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்படும். மேம்படுத்தப்பட்ட புதிய பெட்டிகள் தயாரிப்பு மேலும், அம்ரித் பாரத் ரெயில்களில் கணிசமான அளவில் 'ஏசி' பெட்டிகள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட புதிய வகை பெட்டிகளும் ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய பெட்டிகளில் தரை, இருக்கை மற்றும் படுக்கைகளில் ரெக்சின், சிற்றுண்டி மேசைகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. பயணிகளை கவரும் வகையில் நவீன உள்அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய வகை அம்ரித் பாரத் ரெயில்களையும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/two-amrit-bharat-trains-manufactured-at-chennais-icf-handed-over-to-southern-railway




