மதுரை, மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கக்கோட்டை கிராமத்தில் மந்தைக்களத்தில் வரும் 29, 30-ந்தேதிகளில் கபடி போட்டி நடத்த அனுமதி மற்றும் காவல்துறை பாதுகாப்புக் கோரி காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போட்டிக்கு அனுமதி வழங்க மறுத்து காவல் ஆய்வாளர் உத்தரவிட்டார். இந்நிலையில், திட்டமிட்ட தேதிகளில் கபடி போட்டி நடத்த அனுமதி மற்றும் காவல்துறை பாதுகாப்புக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் சோழவந்தானை சேர்ந்த முகேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, “ஆகஸ்ட் 29, 30-ந்தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கபடி போட்டி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. போட்டியை நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள் என யாரும் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது கட்சித் தலைவர், சாதி, சமூகம் அல்லது மதப்பிரிவு ஆகியவற்றுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கூச்சலிடவோ அல்லது முழக்கம் எழுப்பவோ கூடாது. பொது அமைதி மற்றும் நிம்மதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் இந்த கபடி போட்டியில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் ஆவர். மேலும், போட்டியில் பங்கேற்பவர்கள் எவ்வித போதைப் பொருட்களையோ அல்லது மதுவையோ உட்கொள்ளக் கூடாது. சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் அல்லது மதம் மற்றும் அரசியல் தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட ஆடைகளை போட்டியின் போது அணியக் கூடாது. மதத் தலைவர்களை புகழ்ந்து பாடும் அல்லது மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பாடல்களை போட்டி நடைபெறும் இடத்தில் ஒலிக்கவிடக் கூடாது. குறிப்பிட்ட சமூகம் அல்லது தலைவரைக் குறிக்கும் வகையிலான எந்தவொரு விளம்பரப் பலகைகளையும் வைக்கக் கூடாது. இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் கபடி போட்டியை நிறுத்தவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/individuals-with-criminal-cases-pending-against-them-are-ineligible-to-participate-in-kabaddi-madurai-bench-of-the-high-court



