தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாகவும் காப்பியங்கள் போற்றும் முதன்மையான சுற்றுலாத் தலமாகவும் பூம்புகார் விளங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் பலரும் பூம்புகார் கடற்கரையையும் ‘சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வரலாற்றினைப் பறைசாற்றும்’ கலைக்கூடத்தையும் கண்டு மகிழ்வதுண்டு. இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பூம்புகாரைப் புனரமைக்க ரூ.23.60 கோடி ஒதுக்கப்பட்டு, புனரமைப்புப் பணிகளும் நடைபெற்ற நிலையில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பேருந்து நிழற்குடையோ, பேருந்து நிலையமோ இல்லாததால், கால்கடுக்க நின்றும் கிடைக்கும் இடங்களில் அமர்ந்தும் பேருந்திற்கு காத்திருக்கும் அவலநிலையானது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்துச் சுற்றுலாப் பயணிகளிடம் பேசியபோது, "நாங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து கடற்கரையில் மகிழ்ச்சியோடு பொழுதைக் கழித்து மகிழ வந்துள்ளோம். கடற்கரையில் ஓடி ஆடி விளையாடி, உடல் சலித்த நிலையில்தான் வீட்டிற்குச் செல்ல பஸ் பிடிக்க வருகிறோம். கடற்கரையில் இருந்து சோர்வான நிலையில் வரும் எங்களுக்கு மேலும் சோர்வை ஏற்படுத்தும் விதமாகத்தான் உள்ளது, பஸ் ஸ்டாப் இல்லாதது. இதனால் கிடைக்கும் இடங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டு வாசல்களிலும் காவலாளி போல் உட்கார இடம் கிடைத்தால் போதும் என அமருகிறோம். எதற்கும் வழி இல்லாத நிலையில் பேருந்து வரும் வரை, உச்சி வெயிலில் கால் கடுக்க நின்று கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலம், மக்களும் அவ்வப்போது கூடும் இடம், இருந்தும் பேருந்திற்கு காத்திருக்கவோ பேருந்தை நிறுத்துவதற்கோ ஒரு சரியான இடம் இல்லை. கடுமையான வெயில், மழைக்காலங்களில்கூட இதே நிலைதான். காலையில் வெயில், மாலையில் மழை பெய்வது எல்லாம் தற்காலத்தில் இயல்பாகிவிட்டது. மழை பெய்தால் ஒதுங்குவதற்குக்கூட இங்கு இடம் கிடையாது. இங்குப் புனரமைப்புப் பணிகள் தொடங்கியதிலிருந்தே பயன்பாட்டில் இருந்த பேருந்து நிறுத்தமும் பயன்படுத்த முடியாமல் போனது. சரி, அதற்குப் பதில் புதிய பேருந்து நிறுத்தம் விரைவில் அமைத்துத் தருவார்கள் என நினைத்திருந்தோம். ஆனால், வரும் ஒவ்வொரு முறையும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. மேலும் கழிவறைகள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கும் அல்லல்படும் நிலைதான் உள்ளது. அரசு விரைந்து அனைத்து வசதிகளுடன் கூடிய விசாலமான பேருந்து நிறுத்தத்தை அமைத்துக் கொடுத்து, இடர்பாடற்ற மகிழ்ச்சியான சுற்றுலாப் பயணமாக அமைய வழிவகை செய்ய வேண்டும்" என்றனர். இது குறித்துச் சமூக ஆர்வலரும் தமிழ் ஆர்வலருமான முனைவர் அறிவழகன் கூறியதாவது, ``தமிழர்களின் மரபார்ந்த கலை இலக்கியப் பண்பாட்டைப் பறைசாற்றக்கூடிய முக்கியமான நகரம் காவேரிப்பூம்பட்டினம். பூம்புகார் கடற்கரையின் வரலாற்றைக் காண்பதற்கும் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கும் கடல் காற்றை ரசிப்பதற்கும் எண்ணற்ற விருந்தினர்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து கொண்டிருக்கின்றனர். மயிலாடுதுறையில் இருந்தும் சீர்காழியில் இருந்தும் பேருந்து வசதிகளோடு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் பேருந்து நிறுத்தமோ நிலையமோ இல்லாதது, பேருந்து பயணிகளுக்குப் பெரும் பாதிப்பாக இருக்கிறது. பேருந்து நிலையம் இல்லையென்பதால் குழந்தைகளும், தாய்மார்களும், பெரியவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இங்குத் தொடர்ந்து பேருந்து சர்வீஸ் கிடையாது. அரை மணி நேரமாவது காத்திருக்க வேண்டி இருக்கும். மிகச் சிறப்பான ஒரு சுற்றுலாத் தலத்தில் அடிப்படை வசதியான பேருந்து நிறுத்தத்தை அரசு விரைவில் அமைத்துக் கொடுக்க வேண்டும்" என்றார். இது குறித்து மயிலாடுதுறை மாவட்டச் சுற்றுலா அலுவலர் முத்துசாமியிடம் பேசியபோது, "பூம்புகார் கடற்கரைக்கு வேலை நாட்களில் நாளொன்றுக்குச் சராசரியாக 800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும், வார இறுதி நாட்களில் நாளொன்றுக்கு 2000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் பூம்புகார் புனரமைப்பு செய்யப்பட்ட பகுதியினை முழுவதும் சுற்றுலாச் செயல்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, மதில் சுவருக்கு வெளியே வலது புறத்தில் பேருந்து வந்து செல்வதற்கான இடமானது, சுற்றுலாத்துறை சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இனி மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும்தான் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காகப் பேருந்து நிறுத்தம் அல்லது நிழற்குடை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/poompuhar-tourist-destination-lacks-bus-shelter




