தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆவலம்பட்டி பிரிவு சாலை எதிரில் சேலம்-சென்னை செல்லும் ரெயில் தண்டவாளத்தில் ஆண், பெண் உடல்கள் துண்டாகி சிதறி கிடப்பதாக மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த உடல்களை மீட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் உடல்கள் கிடந்த தண்டவாளத்தின் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வண்டி எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் காதல் ஜோடி ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிளஸ்-1 மாணவி தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தட்சிணா மூர்த்தி மகன் கன்சிராம் ராணா (வயது 19) என்பவர் காரிமங்கலம் பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த அரசு என்பவரின் மகள் அமுதபிரியா என்ற அறிவுஜோதி (16), அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவரும், மாணவியும் உறவினர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் 2 பேரும் காதலித்து வந்ததாகவும், பள்ளியில் படிக்கிற வயதில் என்ன காதல் என்று அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் அந்த மாணவிக்கு அக்காள்கள் இருப்பதாகவும் அவர்களின் எதிர்காலம் கருதி சிறுமியான பிளஸ்-1 மாணவி படிக்க மட்டும் செய், காதல் எல்லாம் வேண்டாம் என்று பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் கதறல் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இருவரும் காணாமல் போனதும் தெரியவந்தது. பின்னர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. தண்டவாளத்தில் துண்டு, துண்டாக சிதறிக்கிடந்த 2 பேரின் உடல்களையும் கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை பதைபதைக்க வைத்தது. காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-couple-committed-suicide-by-lying-on-the-railway-tracks




