மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் பல மாவட்டங்களில் தொடரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாகப் போக்குவரத்து, ரயில் சேவைகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கு அதிரடியாக 'ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மும்பையில் கடந்த திங்கள் கிழமையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவும், இன்று காலையும் விடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்தேரி சுரங்கப்பாதையில் முழங்கால் அளவுக்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று காலை முதலே பெய்து வரும் இடைவிடாத கனமழையால் மும்பையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் வேகமாக அதிகரித்து வருகிறது. மும்பை-புனே நெடுஞ்சாலையில் உள்ள காண்டாலா எக்சிட் அருகேயுள்ள "மிஸ்ஸிங் லிங்க்" பகுதியில் இன்று காலை ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவின் காரணமாகப் பெரிய பாறைகளும் இடிபாடுகளும் புனேவிலிருந்து மும்பை நோக்கிச் செல்லும் வழித்தடத்தில் சரிந்து விழுந்து சாலையை முழுமையாக மூடியுள்ளன. இதன் காரணமாக அந்தப் பாதையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி யாரும் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சாலையில் விழுந்துள்ள இடிபாடுகளை அகற்றி, போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான அவசரக்கால நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கனமழை காரணமாக புனே–மும்பை எக்ஸ்பிரஸ்வே மற்றும் பழைய மும்பை–புனே நெடுஞ்சாலை ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களிலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. பல இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலச்சரிவுகளால் இரண்டு திசைகளிலும் (இரு வழிகளிலும்) வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கடந்த மூன்று நாள்களாகப் பெய்து வரும் இடைவிடாத கனமழையால் புனேயின் பவுட் ரோடு பகுதியில் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து, வாகனப் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாவல் தாலுகாவின் பாடன் கிராமத்தில் இன்று அதிகாலை நேரிட்ட நிலச்சரிவில் ஒரு வீடு இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அங்கு மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைப் பத்திரமாக மீட்பதற்காக 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மும்பை புறநகரில் உள்ள வசாய்-விரார் பகுதியின் பல இடங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வசாய் மற்றும் நல்லாசோபரா ரயில் நிலையச் சாலை உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. நல்லாசோபரா ரயில் நிலையத்திற்குச் செல்லும் முக்கியச் சாலையில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், ரயில் நிலையத்திற்குச் செல்லும் பயணிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கர்ஜத்-லோனாவாலா போர் காட் (Bhor Ghat) மலைப்பாதையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் காரணமாக, மும்பை மற்றும் புனே இடையேயான ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த மலைப்பாதையில் உள்ள மூன்று ரயில் தண்டவாளங்களுமே இடிபாடுகளால் மூடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்று அதிகாலை சுமார் 3:05 மணியளவில், போர் காட் பிரிவில் உள்ள தாக்கூர்வாடி அருகே முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, காண்டாலா மற்றும் மங்கி ஹில் ரயில் நிலையங்களுக்கு இடையே இரண்டாவது பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இது குறித்து மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா கூறுகையில், இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பாறைகளும் மண்ணும் மலைப்பாதையின் மூன்று முக்கிய வழித்தடங்களையும் முழுமையாகப் பாதித்துள்ளன எனத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பெய்து வரும் மிகக் கடுமையான மழையால் 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் 9 ரயில்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/environment/disasters/heavy-rains-and-landslides-across-maharashtra-train-services-disrupted-schools-closed




