கன்னியாகுமரி, ஆடிமாதம் முதல் செவ்வாய்கிழமையை முன்னிட்டு தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலுக்கு திரளான பெண்கள் வருகை தந்து, கூழ், கொழுக்கட்டை படைத்து அவ்வையார் அம்மனை வழிபட்டனர். ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இம்மாதங்களில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும், தடங்கல்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இம்மாதங்களில்அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். அவ்வகையில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று அம்மன் கோவில்களில் பெண்கள் சாரை சாரையாக வந்து வழிபடுகின்றனர். அவ்வையார் அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி அருகே பூதப்பாண்டி செல்லும் சாலையில் உள்ள அவ்வையார் அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியிடங்களிலிருந்து பெண்கள் குடும்பம் குடும்பமாக வாகனங்களில் வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்திலும், அருகில் உள்ள தோப்புகளிலும், தாங்கள் கொண்டு வந்த பொருள்களை கொண்டு கூழ், கொழுக்கட்டை மற்றும் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து அவ்வையார் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். ஆடி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலிலிருந்து தாழக்குடி, மற்றும் செண்பகராமன்புதூர் வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு வழிபாடுகள் முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலிலும் ஆடி செவ்வாயையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் இசக்கியம்மனுக்கு அபிஷேகமும் மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். முப்பந்தல் அருகே உள்ள ஆலமுடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடைவிழாவுக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் அபிஷேகம், மதியம் தீபாராதனை, அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் குமரி மாவட்டத்திலுள்ள அம்மன் கோவில்களிலும் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/aadi-month-first-tuesday-women-devotees-throng-avvaiyar-amman-temple




