வாசிங்டன், 2025 ம் ஆண்டு அபுதாபி டி10 லீக் தொடரின்போது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க கிரிக்கெட் வீரர் போடுகம் அகிலேஷ் ரெட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. சக வீரர் குற்றச்சாட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற அபுதாபி டி10 தொடரின்போது, நவம்பர் 19, 2025 அன்று 'ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ்' அணியின் முதல் போட்டிக்கு முன்பாக, ஹோட்டல் அறையில் தனது சக வீரர் ஒருவரை பந்துவீச்சின்போது திட்டமிட்டு கூடுதல் ரன்களை விட்டுக்கொடுக்குமாறு அகிலேஷ் ரெட்டி வற்புறுத்தி இருக்கிறார். ஆனால், அந்த வீரர் கோரிக்கையை நிராகரித்து, உடனடியாக ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவில் (ACU) புகார் அளித்தார். இதையடுத்து, போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அவர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, நவம்பர் 21-ம் தேதி தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். மூன்று குற்றச்சாட்டுகள் உறுதி இதையடுத்து ஐசிசி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் நடத்திய விசாரணையில், போட்டியின் முடிவை அல்லது போக்கை தவறான முறையில் மாற்ற முயன்றது, மற்றொரு வீரரை சூதாட்டம் தொடர்பான ஊழலில் ஈடுபட தூண்டியது மற்றும் விசாரணைக்கு தேவையான வாட்ஸ்அப் செய்திகள், அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை தனது மொபைலில் இருந்து திட்டமிட்டு நீக்கி விசாரணைக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. 8 ஆண்டுகள் தடை அமல் இதையடுத்து, அகிலேஷ் ரெட்டிக்கு 8 ஆண்டுகள் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அவர் முதன்முதலாக இடைநீக்கம் செய்யப்பட்ட 2025 நவம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. அமெரிக்க அணிக்காக இதுவரை 4 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அகிலேஷ் ரெட்டி, ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/icc-bans-indian-origin-cricketer-for-8-years-in-corruption-case




