வங்கதேசத்தில் தட்டம்மை நோயின் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல், தட்டம்மை எனச் சந்தேகிக்கப்படும் பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகர் டாக்காவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தட்டம்மை என்றால் என்ன? தட்டம்மை என்பது Measles virus மூலம் ஏற்படும் மிகவும் தொற்றும் தன்மை கொண்ட வைரஸ் நோயாகும். இது பெரும்பாலும் காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாகப் பரவுகிறது. அதிக காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், கண்களில் நீர் வடிதல் மற்றும் உடல் முழுவதும் சிவப்பு நிற தடிப்புகள் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். குறிப்பாக தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். சிலருக்கு நிமோனியா, மூளை வீக்கம் உள்ளிட்ட தீவிரமான சிக்கல்களையும் தட்டம்மை ஏற்படுத்தக்கூடும். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோயாக இருந்தாலும், தடுப்பூசி பாதுகாப்பில் ஏற்படும் இடைவெளி இதன் பரவலுக்குக் காரணமாகிறது. அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, மார்ச் மாதத்திலிருந்து மட்டும் 1.66 லட்சத்துக்கும் மேற்பட்ட தட்டம்மை சந்தேக பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 19,835 பேருக்கு ஆய்வகப் பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரவலைக் கட்டுப்படுத்த வங்கதேச அரசு, உலக சுகாதார நிறுவனம் (WHO), UNICEF மற்றும் Gavi அமைப்புகளுடன் இணைந்து மார்ச் மாதத்தில் அவசர தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியது. முதலில் ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் இலக்காகக் கொள்ளப்பட்டனர். பின்னர் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தட்டம்மையைத் தடுக்க இரண்டு தடுப்பூசி டோஸ்கள் வலுவான பாதுகாப்பை வழங்குகின்றன. ஆனால், நோய்ப் பரவலைத் தடுக்க மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி பாதுகாப்பு தேவை என WHO கூறுகிறது. கொரோனா காலத்தில் வழக்கமான தடுப்பூசி திட்டங்கள் பாதிக்கப்பட்டதும், 2024-ல் நடத்த வேண்டிய தடுப்பூசி முகாம் பெருமளவில் தவறியதும், தடுப்பூசி பெறாத குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் முன்பு கட்டுப்பாட்டில் இருந்த தட்டம்மை மீண்டும் பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த நிலை, தடுப்பூசி திட்டங்களில் ஏற்படும் சிறிய இடைவெளிகூட எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய சுகாதார நெருக்கடியை உருவாக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/health/bangladesh-measles-outbreak-deaths-cross-1000-as-vaccination-drive-falls-short



