சென்னை, ஆவின் பால் தமிழகத்தின் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆரம்ப காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் இந்த பால் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று பால் விற்பனை செய்து வந்தனர். ஆனால் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை அதிகரிக்கவில்லை. இதனால் ஆவினுக்கு பால் வழங்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு விவசாயிகள் பால் விற்பனை செய்து வருகின்றனர். ஆவின் நிறுவனம் சராசரியாக 1 லிட்டர் பாலை ரூ.34-க்கு கொள்முதல் செய்கிறது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் பாலை ரூ.50 வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பதற்கே விவசாயிகள் முன்னுரிமை அளிக்கின்றனர். மேய்ச்சல் நிலங்கள் குறைந்தன கடந்த காலங்களில் கிராமங்களில் வீடுகள்தோறும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கப்படும். இந்த கால்நடைகள் காலையில் மேய்ச்சல் நிலங்களுக்கு சென்றால் மாலையில் வீடு திரும்பும். இதனால் அந்த கால்நடைகளுக்கு பசுந்தீவனங்களை விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை. தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை குறைந்த அளவில் மட்டும் வாங்கினால் போதும். வறட்சி காலங்களில் தங்களது வீடுகளில் இருப்பில் உள்ள வைக்கோலை மாடுகளுக்கு உணவாக வழங்குவர். மேலும் சோளத்தட்டை வளர்க்கப்பட்டு, அவையும் கால்நடைகளுக்கு உணவாக வழங்கப்படும். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- தற்போது மேய்ச்சல் நிலங்கள் குறைந்து விட்டன. இதனால் மாடுகளுக்கு பெரும்பாலும் பசுந்தீவனங்களை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. அது கிடைக்காத பட்சத்தில் தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை அதிகமாக வாங்க வேண்டி உள்ளது. ஆனால் அந்த தீவனங்களின் விலையும் அதிகரித்து வரு கிறது. புண்ணாக்கு 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.1,800-க்கு விற்பனையாகிறது. இவ்வாறு செலவு அதிகரிப்பதால் 1 லிட்டர் பாலை ரூ.34-க்கு விற்பதில் எந்த லாபமும் கிடைப்பது இல்லை. பால் வினியோகம் இதனால் பெரும்பாலானவர்கள் மாடுகள் வளர்ப்பதை தவிர்த்து வருகின்றனர். அத்துடன் தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் பாலுக்கு ரூ.50 வரை கொள்முதல் விலை கொடுப்பதால் பலரும் அங்கேயே பால் விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இது தவிர வீடுகளுக்கு நேரடியாக பால் வினியோகம் செய்யும்போது 1 லிட்டர் பாலை ரூ.62 வரை விற்க முடிகிறது. இதுபோன்ற காரணங்களால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வினியோகம் செய்வது குறைந்து உள்ளது. இது தவிர நோய் பாதிப்பால் மாடுகள் இறப்பது. பால் உற்பத்தி குறைவது உள்ளிட்டவையும் மற்றொரு காரணமாக உள்ளது. எனவே தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனமும் கொள்முதல் விலையை உயர்த்தினால் விவசாயிகள் தடை யின்றி பால் வினியோகிக்க முன்வருவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-are-reluctant-to-provide-milk-to-aavin-what-is-the-reason




