புதுடெல்லி, தலைநகர் டெல்லியின் தெற்கில் அமைந்துள்ள சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்களின் தங்கும் விடுதிகள் அதிக அளவில் அமைந்துள்ளன. பல அடுக்குமாடி கட்டிடங்கள் விடுதிகளாக மாற்றப்பட்டு மாணவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இங்குள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். அந்த வகையில், அங்குள்ள நானக்புரா குருத்வாரா அருகே 5 மாடி கட்டிடம் ஒன்று மாணவர் விடுதியாக இயங்கி வந்தது. இதில் 15-க்கு மேற்பட்ட அறைகள் இருந்தன. இவற்றில் கேரளம், அரியானா, உத்தர பிரதேசம் போன்ற பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லியில் பெய்த கனமழையால், கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் விரைந்து வந்து, உள்ளூர்வாசிகளுடன் இணைந்து மீட்புப்பணிகளை தொடங்கினர். மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட அவசர கால படைகளும் வரவழைக்கப்பட்டன. அவர்கள் முதலில் 11 பேரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 5 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இன்றோடு மீட்புப் பணிகள் 2-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், டெல்லி கட்டிட விபத்து சம்பவத்தில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை 12 பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும் பணியில் டெல்லி காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/delhi-building-collapse-death-toll-rises-to-7



