சென்னை, 15 நாளில் அரசி கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளதாகவும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 15 நாள்களுக்கு முன் அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் 15 நாள் இடைவெளியில் சாப்பாட்டு அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இரு நாள்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.52க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரக பொன்னி அரிசி விலை இப்போது ரூ.8 விலை உயர்ந்து ரூ.60 ஆகியுள்ளது. மைசூர் பொன்னி, ஆந்திரா பொன்னி ஆகிய அரிசி வகைகளின் விலை 50 ரூபாயிலிருந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. சன்னரக அரிசி விலை ரூ.64-லிருந்து ரூ.75 ஆக உயர்ந்திருக்கிறது. இட்லி அரிசி விலை கிலோ ரூ.43-லிருந்து ரூ.50 ஆக அதிகரித்துள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டை லை ரூ.250 முதல் ரூ.400 வரை உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பருவ மழை பெய்யாததால் காவிரி பாசன மாவட்டங்களில் கோடை மற்றும் குறுவை பருவ சாகுபடி குறைந்தது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 பருவங்களிலும் நெல் அமோகமாக விளைந்ததாலும், நடப்பாண்டில் குறுவை பருவம் இன்னும் முடிவடையாததாலும் இந்த காரணத்தை ஏற்க முடியவில்லை. அடுத்த சில மாதங்களில் அரிசி வரத்து குறையும் என்பதை எதிர்பார்த்து வணிகர்கள் செயற்கையாக விலையை உயர்த்தியிருப்பதாகவே உழவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும் அரிசி விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படக் கூடாது. அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்; மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் சந்தையில் அரிசியின் புழக்கத்தை அதிகரித்து விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மாநில அரசும் அதன் பங்குக்கு விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகள், மொத்த வணிகர்கள் ஆகியோரிடம் உள்ள அரிசியில் 20 விழுக்காட்டை அடக்க விலைக்கு அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள், கூட்டுறவு விற்பனை அங்காடிகள் ஆகியவற்றின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rice-price-hike-must-be-controlled-anbumani-ramadoss-urges-tamil-nadu-government




