சென்னை, மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவை மற்றும் 2026-27 ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா பாசனத்திற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (01.09.2026) தண்ணீர் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் விஜய் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (1.9.2026) சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளவும், காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யவும் தண்ணீரைத் திறந்து வைத்தார். இன்று (1.9.2026) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாகவும், நீர் இருப்பு 54.452 டி.எம்.சி. ஆகவும், நீர்வரத்து வினாடிக்கு 10,857 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பாசனத் தேவைக்கேற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக முறைப்படுத்தப்படும். மேட்டூர் அணை இதுதொடர்பாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகிய துறைகள் மாவட்ட நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் ஒவ்வொரு கனஅடி நீரும் விவசாயிகளின் நலனுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுவது உறுதிசெய்யப்படும். காவிரி ஆறு மற்றும் கால்வாய்களின் வழித்தடங்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சுதல், அனுமதியின்றி நீர் எடுத்தல் மற்றும் அனுமதிக்கப்பட்ட நீரேற்றுத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக நீர் எடுப்பது ஆகியவை கண்டிப்பாகத் தடுக்கப்படும். விட்டுக்கொடுக்க மாட்டோம் இதற்காக நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக அலுவலர்களைக் கொண்ட கூட்டுக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இரவு–பகலாக ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். காவிரி நீர் என்பது நடுவர்மன்றத் தீர்ப்பாலும் மாண்பமை சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பாலும் உறுதிசெய்யப்பட்ட நமது சட்டப்பூர்வ உரிமையாகும். அந்த உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை சுப்ரீம்கோர்ட்டின் 16.02.2018-ஆம் நாளிட்ட தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப்பெற அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல் நினோ தாக்கம் மாண்பமை சுப்ரீம்கோர்ட்டையும் அணுகி, தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கையும், டெல்டா விவசாயிகளின் உரிமையையும் பாதுகாப்பதற்கான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறை மற்றும் தீவிர எல் நினோ தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தற்போது நீர் திறப்பது, வரையறுக்கப்பட்ட நீரைச் சிக்கனமாகவும், திறம்படவும் நிர்வகித்து சம்பா சாகுபடியைப் பாதுகாப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையாகும். எனவே, விவசாயிகள் குறைந்த நீர்த் தேவையுள்ள மத்திய கால நெல் இரகங்களையும், நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட நீர்ச் சிக்கன சாகுபடி முறைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சம்பா சாகுபடி “நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்; சம்பா சாகுபடியை வெற்றிபெறச் செய்வோம்.” இந்த நிகழ்வில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ந.ஆனந்த், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் சோ.லட்சுமணன், கா. சிவக்குமார், மே.ச. பழனிவேல், நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் மு.வடநெரே, இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) எஸ். கோபாலகிருஷ்ணன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ஏ.ஜெயகுமாரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயப் பெருங்குடிமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-use-water-judiciously-and-distribute-it-right-up-to-the-tail-end-areas-government-of-tamil-nadu




