மும்பை பயந்தர் கிழக்கு பகுதியில், வசிப்பவர் அஸ்கரலி வோரா(81). இவர் பயந்தர் கிழக்கு பகுதியில் 1989ம் ஆண்டு 2,810 சதுர மீட்டர் நிலத்தை விலைக்கு வாங்கினார். ஆனால் அந்த நிலத்தை இரண்டு பில்டர்கள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு அந்தச் சொத்து ஆக்கிரமிக்கப்பட்டதாக வோரா குற்றம் சாட்டியுள்ளார். அவர் இது தொடர்பாக போலீஸில் கொடுத்துள்ள புகாரில், 'சுயம் பில்டர்ஸ்' மற்றும் 'செவன்-இலவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய நிறுவனங்கள் அதனை ஆக்கிரமித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தச் சொத்து தொடர்பான ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டதாகவும், இதுகுறித்த நிகழ்வுகள் அசல் உரிமையாளருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் வோரா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இரண்டு பில்டர்களும் அந்த நிலத்தை இரண்டாக பிரித்து ஆக்கிரமித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான பிரச்னை கோர்ட்டில் இருக்கிறது. 2015ம் ஆண்டு இது தொடர்பாக ஒரு பதிவு செய்யப்பட்டது. போலீஸில் புகார் செய்யப்பட்டபோதிலும், இதற்கு தீர்வு காண்பதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினரைத் தொடர்ந்து வோரா அணுகி வந்தார். ஆனால் இதில் தீர்வு காணப்படவில்லை. இதில் பா.ஜ.க எம்.எல்.ஏ.நரேந்திர மேத்தாவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்னையை வோரா பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். வோராவும், நரேந்திர மோடியும் குஜராத் பள்ளியில் ஒன்றாக படித்தவர் ஆவர். பழைய பள்ளி தோழன் என்ற முறையில் வோரா தனது மனைவியுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த நிலப்பிரச்னை குறித்து புகார் கொடுத்துள்ளார். தனது நிலத்தை வாங்கிக் கொடுக்கும்படியும், இந்த நில மோசடி தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அவர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டார். பிரதமருடனான சந்திப்பின்போது, இந்த நிலத்திற்காக பல ஆண்டுகளாகப் பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் போலீஸாரை அணுகி வருவதாகவும், ஆனால் எங்கேயும் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். இப்பிரச்னை பிரதமரிடம் சென்று இருப்பதால் இவ்விவகாரம் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. பிரதமரிடம் புகார் செய்து இருப்பதால் பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக வோரா தெரிவித்துள்ளார். பிரதமரின் கவனத்திற்கு சென்று இருப்பதால் வரும் 16ம் தேதி இப்பிரச்னை குறித்து பேச இரண்டு பில்டர்கள் மற்றும் இதில் தொடர்புடையவர்களை மாநகராட்சி நிர்வாகம் அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/trending/friend-help-me-reclaim-my-land-81-year-old-man-appeals-to-schoolmate-prime-minister-narendra-modi




