அனைவருக்கும் பசுமை வணக்கம்! நாட்டின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையைத் தமிழக அரசு உயர்த்தினால்தான், தங்களுக்குச் சிறிதளவாவது லாபம் கிடைக்கும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், ‘தமிழ்நாடு அரசு தற்போது உயர்த்தியுள்ள பால் கொள்முதல் விலை மிகவும் குறைவு. இது நியாயமானதல்ல’ எனக் கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், ‘ஆவின் நிறுவனத்துக்குப் பால் வழங்கி வரும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய் விலை உயர்வு வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை, லிட்டருக்கு 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தப்படும்’ என்று அறிவித்துள்ளார். இதன்படி, இனிவரும் நாள்களில் விவசாயிகளுக்குப் பால் கொள்முதல் விலையாக 34 ரூபாய் கிடைக்கும். இந்த விலை நிச்சயமாகப் போதாது. பசுந்தீவனம், அடர் தீவனம், பால் கறவைக் கூலி, மருத்துவச் செலவுகள் மற்றும் இதர பராமரிப்பு செலவுகள் போன்றவை கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, கறவை மாடுகள் வளர்ப்போர் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். எனவே, லிட்டருக்குக் குறைந்தபட்சம் 50 ரூபாயாவது வழங்கினால்தான் ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும். கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல் விலையாக ஒரு லிட்டருக்கு சராசரியாக 50 ரூபாய் வழங்கப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் 62 ரூபாயும், பஞ்சாப்பில் 65 ரூபாயும் வழங்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை, லிட்டருக்கு 44 ரூபாய் பால் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்றது. ஆனால், தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு, விவசாயிகளை மிகுந்த விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. ‘தமிழக முதல்வர் விஜய், தற்போது வெளியிட்டுள்ள பால் விலை உயர்வைக் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு லிட்டருக்குக் குறைந்தபட்சம் 10 ரூபாயாவது உயர்த்தி வழங்க வேண்டும்’ என்பது கறவை மாடு வளர்ப்போரின் நியாயமான எதிர்பார்ப்பு. தமிழக முதல்வர் விஜய், விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பாரா? பொறுத்திருந்து பார்க்கப் போதுமான காலமில்லை. உடனடியாக இதை கவனத்தில்கொண்டு நல்லதோர் அறிவிப்பை வெளியிடுவார் என உறுதியாக நம்புவோம். தவறும்பட்சத்தில் பால் நிறுத்தப் போராட்டம் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள் விவசாயிகள். மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள், பால். தமிழக அரசு நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும். - ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/governance/editorial-page-september-08-2026



