திருச்சி, தி.மு.க. முதன்மை செயலாளரும், முன் னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. பற்றி துரை வைகோ எம்.பி. கடுமையாக விமர்சனம் செய்து வருவதாக கூறுகிறார்கள். அவர் என்ன பேசினார் என எனக்கு தெரியாது. ஆனால் அவர் பிறப்பதற்கு முன் நடந்த மிசா பற்றி எல்லாம் பேசுகிறார். தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசுவதற்கு துரை வைகோவிற்கு உரிமை கிடையாது. 'எனது தந்தை கோபக்காரர். கட்சிக்கு வளர்ச்சி இல்லை. என்னால் கட்சியை நடத்த முடியாது. நான் தி.மு.க.விற்கு வந்து விடுகிறேன்' என என்னிடம் கூறியவர் தான் துரை வைகோ. அவர் சிறுபிள்ளையாக இருந்துகொண்டு அதிகமாக பேசுவதற்கு எல்லாம் நான் பதில் அளிக்க முடியாது என்றார். இந்த நிலையில், கே.என்.நேருவின் விமர்சனத்துக்கு துரை வைகோ பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- நான் திமுகவில் இணைய விரும்பியதாக கே.என்.நேரு கூறுவது கட்டுக்கதை. எனக்கு தனிப்பட்ட அரசியல் விருப்பமோ, வேட்கையோ கிடையாது. கலைஞர் காலத்துடன் திமுக முடிந்துவிட்டது என கே.என்.நேரு என்னிடம் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் அரசியல் தெரியாதவர் என்று கூறியவர்தான் கே.என்.நேரு. திமுகவில் பல பேரை காலி செய்தவர் கே.என்.நேரு. அன்பில் மகேஸ் தோல்வியடைய காரணமே கே.என்.நேருதான். திருச்சியைச் சேர்ந்த திமுகவின் முக்கியப் புள்ளி உள்ளிட்ட உடன் இருப்பவர்களையே காலி செய்துள்ளார் நேரு. உதயநிதியை வைத்து அரசியல் செய்ய முடியாது என சொன்னவர் கே.என்.நேரு. கூட்டணியில் இருந்தபோதே திமுகவினர் என்னை பற்றி அவதூறாக பேசினர். சிறுமைப்படுத்துவது, பண்ணையார் அரசியல் செய்வது என்னிடம் நடக்காது. தனி மனித தாக்குதலுக்கு பயப்படக்கூடிய ஆள் நான் இல்லை, யாரும் என்னை மிரட்ட முடியாது. எனக்கும் நிறைய விஷயங்கள் தெரியும், அனைத்தையும் பேச வேண்டியது இருக்கும். நான் அரசியலுக்கு வந்தது விபத்துதான். நாடாளுமன்ற தேர்தலில் என்னை வேட்பாளராக அறிவித்த உடனே நீங்கள் சூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தார்கள். வேறு சின்னத்தில் நின்றால் திமுகவினரே உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என்றார்கள். அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியின் மேடையிலேயே எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கமாட்டேன் என்று அன்றே கூறிவிட்டேன். என் தந்தை விருப்பத்திற்காக அரசியலுக்கு வந்தேன். சிறுமைப்படுத்துவது, பண்ணையாளர் அரசியல் செய்வது என்னிடம் நடக்காது. என்னை மதித்தால் நான் மதிப்பேன். பதிலுக்கு ஏதாவது செய்தார்கள் என்றால், முழு நேரம் இதற்காக நான் ஒதுக்கி ஏதாவது செய்வேன். மிசா காலத்தில் நான் பிறக்கவே இல்லை என்று தவறான கருத்தை சொல்கிறார். அப்போது எனக்கு 3 வயது, ப்ளே ஸ்கூல் சென்று கொண்டிருந்தேன். அந்த வரலாறு கூட அவருக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/durai-vaiko-leveled-various-allegations-against-kn-nehru




