சென்னை, அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்று விதி இருக்கின்றது. அதன்படி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க., ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை பிரமாண்டமாக கூட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சற்று முன்னதாக அடுத்த மாதமே (ஆகஸ்டு) அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை ஏற்கனவே, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் தலைதூக்கியுள்ள நிலையில், அதை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 85 மாவட்டங்கள் இருக்கின்றன. சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக, கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து பேசி வந்தார். கூட்டத்திற்கு வராதவர்களின் பெயர்களை தனியாக குறித்து வைத்துக்கொண்டார். இந்த கூட்டம் கடந்த 25-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதிருப்தியாளர்களை நீக்க திட்டம் இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், பி.தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இதேபோல், எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழி தேவன், சுகுமார், ராகேஷ் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்ளாத அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதிருப்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளதாம். அதற்கு உடன்படாதவர்களை கட்சியைவிட்டு நீக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம். காலியாகும் கட்சிப் பதவிகளுக்கு உடனடியாக நிர்வாகிகளையும் நியமித்து, அடுத்த மாதம் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தையும் கூட்ட எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருகிறாராம். உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவு உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எனவே, முக்கிய நிர்வாகிகள் கூட உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-working-committee-meeting-next-month-amid-internal-party-disputes




