சென்னை, மத்திய அரசே!மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்காதே! எதேச்சதிகார முடிவுகளைத் திணிக்காதே! என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தொகுதி மறுவரையறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறைத் தொடர்பான தீர்மானத்தை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது. தொகுதி மறுவரையறையால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதும் இந்த விவகாரத்தின் முக்கியமான அம்சங்களாகும். 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள், அதற்காகவே நாடாளுமன்ற இடங்களை இழக்கக் கூடாது என்பதற்காக, மாநிலங்களுக்கான மக்களவை இடங்களின் மறுபங்கீடு முடக்கப்பட்டது. 42 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இதற்கு வழிவகுத்தது. பின்னர் 84வது திருத்தம், 2001, இந்த ஏற்பாட்டை 2026க்குப் பிந்தைய முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை நீட்டித்தது. இதன் விளைவாக தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகள் பாதுகாக்கப்பட்டன. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்காக ஒரு மாநிலம் அரசியல் ரீதியாகத் தண்டிக்கப்படக் கூடாது. இப்போது எழுந்துள்ள அச்சம் என்னவென்றால், மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகை அதிகரித்த மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும். அதே நேரத்தில் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் மொத்த மக்களவைப் பிரதிநிதித்துவத்தில் உள்ள பங்கு குறையக்கூடிய நிலை உருவாகலாம். இதனால் குடும்பக் கட்டுப்பாடு, பெண்கள் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னேறி மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டுக்கே எதிர்மறையான அரசியல் விளைவு ஏற்படும் அபாயம் உள்ளது. எப்படி உறுதி செய்வது? 2026 இல் மத்திய அரசின் விளக்கத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு மாதிரி கணக்கீட்டின்படி, மக்களவை இடங்கள் சுமார் 543 இலிருந்து 815 ஆக அதிகரிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் இடங்கள் 39 இலிருந்து 59 ஆக உயரலாம் என்று காட்டப்பட்டது. அந்த மாதிரியில் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவப் பங்கை பெருமளவில் பாதுகாக்கும் வகையில் சுமார் 50% இடங்கள் அதிகரிக்கப்படும் என விளக்கப்பட்டது. ஆனால் இது இறுதி தொகுதி எண்ணிக்கை அல்ல. ஒரு மாதிரி கணக்கீடு மட்டுமே. எனவே விவாதம் “543 வேண்டுமா? 815 வேண்டுமா?” என்பதில் முடிந்துவிடக் கூடாது. உண்மையான கேள்வி என்பது, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரித்தாலும், இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் பிரதிநிதித்துவ விகிதம் குறையாமல் இருப்பதை எப்படி உறுதி செய்வது? இதற்கான அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புதான் தமிழ்நாட்டின் நீண்டகாலக் கோரிக்கை 1.தமிழ்நாட்டின் தற்போதைய 39 மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படக் கூடாது. 2.மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காக, தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது. 3.எதிர்காலத்தில் மக்களவை இடங்கள் அதிகரிக்கப்பட்டாலும், தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவப் பங்கு குறையாத வகையில் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதம் வழங்க வேண்டும். 4.தொகுதி மறுவரையறைக்கான கணக்கீட்டு முறை வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். 5.தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுடன் முறையான ஆலோசனை நடத்தாமல் இறுதி முடிவு எடுக்கக் கூடாது. மாற்றுக் கருத்து இல்லை பெண்களுக்கு 33% நாடாளுமன்ற இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த சமூகநீதி நடைமுறைப்படுத்தப்படும் போது, மாநிலங்களின் பிரதிநிதித்துவச் சமநிலையும் பாதுகாக்கப்பட வேண்டும். இன்றைய தீர்மானத்தில் 2029 தேர்தலுக்கான பெண்கள் இடஒதுக்கீட்டைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தீர்மானம் என்பது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தீர்மானம் ஆகும். இதை கவனத்தில் கொண்டு, மத்திய அரசு தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்த விதத்திலும் குறைந்து விடாதபடி, தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை செய்து தமிழ்நாடு அரசின் தீர்மானத்தின் படி தொகுதி மறுவரையறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வு கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-do-not-reduce-the-representation-of-the-states-velmurugan




