ஆமதாபாத், ரூ. 30,000 கோடி மதிப்பீட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா 100 புதிய விமான நிலையங்களை அமைக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். நாட்டிற்கே ஒரு சாதனை ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் மூன்றாவது 'ஹப் அண்ட் ஸ்போக்' (hub & spoke - மைய மற்றும் கிளை வழித்தட) செயல்பாட்டை அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைத்தார். அந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:- 2014-ல் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், இன்று இந்தியாவின் வரைபடத்தில் 166 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை நாம் பெருமையுடன் கூறலாம். 74-லிருந்து 166-ஆக உயர்ந்தது நாட்டிற்கே ஒரு சாதனையாகும். கடந்த 12 ஆண்டுகளில், ஏறக்குறைய ஒவ்வொரு 40 நாட்களுக்கும் ஒரு புதிய விமான நிலையம் அல்லது புதிய முனையத்தின் பணிகளை நாங்கள் நிறைவு செய்துள்ளோம். 100 புதிய விமான நிலையங்கள் இந்த 12 ஆண்டு காலப் பயணம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு ஒரு தொடக்கம் மட்டுமே. கடந்த பத்தாண்டுகளில் 'உடான்' திட்டம் மூலம் விமானப் பயணத் துறையில் கொண்டுவரப்பட்ட புரட்சிகரமான மாற்றங்களை நாங்கள் மேலும் விரிவுபடுத்தியுள்ளோம். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்களை அமைக்க சுமார் ரூ. 30,000 கோடியை செலவிடத் திட்டமிட்டுள்ளோம். சிவில் விமானப் போக்குவரத்துத் துறை நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாக இருக்கிறது. பொதுமக்களின் தேவை இப்போது வெறும் ரெயில் நிலையம் அல்லது ரெயில் நிறுத்தம் என்பதோடு நின்றுவிடாமல், தங்கள் சொந்த நகரத்திலேயே ஒரு விமான நிலையம் இருக்க வேண்டும் என்ற நிலைக்கு மாறியுள்ளது. நவீன இந்தியாவின் குரல் இந்தக் கோரிக்கை பெரிய நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல; இது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், இமயமலைப் பகுதிகள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, அந்தமான் போன்ற தீவுப் பகுதிகளிலிருந்தும் வருகிறது. தங்கள் பகுதியில் எப்போது விமான நிலையம் அமைக்கப்படும் என்று மக்கள் எல்லா இடங்களிலும் கேட்கிறார்கள். இது நவீன இந்தியாவின் குரல். நாங்கள் அதைக் கேட்டு, அதற்கேற்ப கொள்கைகளை வகுத்து, முன்னேறி வருகிறோம். இந்தியா தனது விமான நிலைய வலையமைப்பை வேகமாக விரிவுபடுத்தி வரும் நிலையில், உண்மையான சவால் கட்டுமானத்தில் இல்லை, மாறாக இந்த விமான நிலையங்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எவ்வளவு திறம்பட இணைக்கப்பட்டுள்ளன என்பதில்தான் உள்ளது. இவ்வாறு மந்திரி ராம்மோகன் நாயுடு கூறினார். தடையற்ற சர்வதேச இணைப்பு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, நடப்பாண்டு மார்ச் மாதம், மத்திய அரசின் பட்ஜெட் ஆதரவுடன் ரூ. 28,840 கோடி மொத்த மதிப்பீட்டில், 2026-27 முதல் 2035-36 வரையிலான 10 ஆண்டுகளுக்கு 'திருத்தப்பட்ட உடான்' (Modified UDAN) எனும் பிராந்திய இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. இந்திய மைய விமான நிலையங்கள் (hub airports) மூலம் நாடு முழுவதிலுமிருந்து வரும் பயணிகளுக்கு தடையற்ற சர்வதேச இணைப்பை வழங்குவதன் மூலம், நாட்டை ஒரு உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/00-new-airports-to-be-built-in-india-over-next-10-years-aviation-minister-naidu




