சென்னை, 2024 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலத்துக்கான தமிழக அரசின் வருவாய் தொடர்பான சி.ஏ.ஜி.(இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அமைப்பு) அறிக்கை, கடந்த செப்டம்பர் 8-ந்தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-20 முதல் 2023-24 வரையிலான வாகனப்பதிவு தரவுகளின்படி, 6.75 லட்சம் வாகனங்களுக்கு 'பேன்சி' எண்களை ஒதுக்க 4.16 லட்சம் தனித்தனி செல்போன் நம்பர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 53,000 செல்போன் எண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்தப்பட்டு, 3.12 லட்சம் 'பேன்சி' பதிவு எண்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் ஒரே தனிநபர் செல்போன் எண் சுமார் 2,008 முறை வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி.சுட்டிக்காட்டியுள்ளது. ஒரே செல்போன் எண் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், சில தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் 'பேன்சி' பதிவு எண்களை மொத்தமாகப் பெற்று, பின்னர் அவற்றை மறுவிற்பனை செய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. மேலும், பதிவு எண்கள் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், கிடைக்கக்கூடிய ஆனால் ஒதுக்கப்படாத பதிவு எண்களை அறிய பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. இதனால் வாகனப்பதிவு நடவடிக்கைகளுக்காக இடைத்தரகர்கள் அல்லது ஏஜென்சிகளை பொதுமக்கள் அதிகம் சார்ந்திருக்கும் சூழல் உருவாகிறது. இது குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அளித்த விளக்கத்தில், 'வாஹன்' இணையதளத்தில் 'பேன்சி' பதிவு எண்கள் ஒதுக்கீடு ஆதார் அடையாள சரி பார்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரே செல்போன் எண்ணைப் பயன்படுத்தி பல பதிவு எண்கள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/cag-reveals-a-single-mobile-number-was-used-2008-times-to-obtain-fancy-vehicle-registration-numbers-in-tamil-nadu




