சென்னை, ஆடி மாதம் பிறக்க இருப்பதையொட்டி, ஜவுளிக் கடைகளில் ஆடித் தள்ளுபடி விற்பனை எப்படி தொடங்கியது? என்ற சுவாரஸ்ய தகவலை பார்க்கப்போகிறோம். ஆடித்தள்ளுபடி விற்பனை பொதுவாக, ஆடி மாதம் அம்மனை தரிசிக்க உகந்த மாதமாக கருதப்படுகிறது. மற்றபடி, திருமணம், சுப நிகழ்ச்சிகள் எதுவும் இம்மாதத்தில் நடைபெறாது. புது மணத்தம்பதிகளை கூட பிரித்து வைக்கும் சம்பிரதாயங்களும் உண்டு. இப்படிபட்ட ஆடி மாதம் பிறக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இடைவெளி இருக்கிறது. ஜூலை 17-ந் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. ஆனால், அதற்கு 15 நாட்களுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஜவுளிக் கடைகளில் ஆடித் தள்ளுபடி விற்பனை தொடங்கிவிட்டது. சுவாரஸ்ய பின்னணி அதுவென்ன, ஆங்கிலத்தில் 12 மாதங்கள் இருப்பது போல், தமிழிலும் 12 மாதங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, ஆடி மாதத்தில் மட்டும் தள்ளுபடி விற்பனை நடைபெறுவது ஏன்? என்ற கேள்வி பலரது மனதில் எழலாம். அதற்கு சுவாரஸ்ய பின்னணியும் இருக்கிறது. இப்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில், அனைவரது கையிலும் எப்போதும் பணப்புழக்கம் இருக்கிறது. பணம் இல்லை என்றாலும், ஒரு பொருள் தேவையென்றால், மாதத் தவணையில் வாங்கிவிட முடியும். அதற்கான வசதிகளை வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்கின்றன. ஆடிப் பட்டம் தேடி விதை ஆனால், முந்தைய காலத்தில் அப்படி எந்த கடன் வசதியும் கிடையாது. குறிப்பாக, ஆடி மாதத்தில் விவசாயிகள் கையில் பணம் இருக்காது. "ஆடிப் பட்டம் தேடி விதை" என்று பழமொழி ஒன்று சொல்வார்கள். அதாவது, ஆடி மாதத்தில் கரும்பு, நெல் நடவுப் பணிகளுக்காக விவசாயிகள் தங்கள் கையில் உள்ள பணத்தை எல்லாம் செலவு செய்துவிடுவார்கள். இதுபோக, ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட எந்த சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்பதால், ஜவுளிக் கடைகளில் விற்பனையே இருக்காது. அதாவது, அந்த மாதத்திற்கான சம்பளத்தைகூட ஊழியர்களுக்கு கொடுக்க முடியாமல், பல ஜவுளிக்கடை உரிமையாளர்கள் கஷ்டப்பட்டுள்ளனர். கடை உரிமையாளர்கள் வியூகம் ஒவ்வொரு ஆண்டும் இதேநிலை தொடர்ந்ததால், ஆடி மாதத்தில் ஜவுளி விற்பனையை அதிகரிக்க கடை உரிமையாளர்கள் வியூகம் வகுத்தனர். அதன்படி, ஆடிக்கழிவு என்ற பெயரில், கடைகளில் விற்பனையாகாமல் நீண்ட நாள் தேங்கிக்கிடந்த துணிகளை சற்று லாபம் குறைத்து, தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்தனர். இதுகுறித்து, பொதுமக்கள் மத்தியிலும் விளம்பரப்படுத்தப்பட்டது. ஜவுளிக்கடை உரிமையாளர்கள் எதிர்பார்த்தது போல, அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. ஆடி மாதத்தில் தள்ளுபடி விலையில் ஜவுளியை வாங்க பொதுமக்கள் ஓடோடி கடைகளுக்கு வந்தார்கள். லாபம் சற்று குறைவு என்றாலும், விற்பனையாகாமல் தேங்கிக்கிடந்த ஜவுளிகளும் விற்பனையானதால், அடுத்து வரும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு புத்தம் புதிய துணிமணிகளை கடைகளில் வாங்கி வைக்க இது வசதியாக அமைந்தது. விற்பனை ஜோர் "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்று சொல்வார்களே, அதுபோல, ஆடி மாதத்தில் ஜவுளி விற்பனையும் நடந்தது. தேங்கிக் கிடந்த துணிகளும் விற்பனையாகி காலியாகின. இப்படித்தான் ஆடித்தள்ளுபடி ஜவுளி விற்பனை தொடங்கியது. இன்றைக்கு 5 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி என்று தமிழகம் முழுவதும் பரந்து விரிந்துவிட்டது. எல்லா கடைகளிலும் ஜவுளி விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/the-month-of-aadi-is-approaching-and-the-aadi-sale-has-already-begundo-you-know-how-it-all-started




