புதுடெல்லி, மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆசிரியர் பாஸ்கர் பால் என்பவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த 2025-ம் ஆண்டு, பாடங்களை முடிக்காதற்காக ஆசிரியர் பாஸ்கர் பால் முதுகில் அடித்ததாக 2 மாணவிகள் அளித்த புகாரின்பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பாஸ்கர் பால் தாக்கல் செய்த மனு நீதிபதி உஜ்ஜுல்புயான், நீதிபதி அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவிகள் பாடங்களை முடிக்காததால் முதுகில் அடிப்பது, கையைப் பிடிப்பது போன்ற ஆசிரியரின் செயல்கள், பதிவுகளில் உள்ள அறிக்கைகளின்படி பாலியல் வன்கொடுமைக்கு இடமளிக்கவில்லை என்று தெரிவித்தனர். பெண்கள் அல்லது இருபாலர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்படுவது அவரது வாழ்க்கைக்கும், பணிக்கும் மரணஅடி போன்றது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கடுமையான போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிற்காலத்தில் அவர் விடுவிக்கப்பட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்பை மாற்ற இயலாது என்று தெரிவித்தனர். சிறுவயது குழந்தைகளை கையாளும்போது ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், 2012-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட போக்சோ சட்டத்தின் 7-வது பிரிவின்படி, குறிப்பிட்ட உடல் பாகங்களைத் தொடுதல் அல்லது ஊடுருவல் இல்லாத உடல் ரீதியான தொடர்பில் பாலியல் குற்றச்சாட்டு நோக்கம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். பாலியல் நோக்கம் இல்லாமல் மாணவிகளை அடிப்பது, முதுகில் தொடுவது போன்ற செயல்கள் முறையற்ற நோக்கத்துக்குரிய தண்டனையாக கருதப்பட்டாலும், அது போக்சோ சட்டத்தின்கீழ் வராது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ஆசிரியரின் செயல் முறையற்றதாக இருந்தாலும், அது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது எனக் கூறி அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/a-teacher-beating-female-students-does-not-constitute-an-offense-under-the-pocso-act-supreme-court




