வாஷிங்டன், கடந்த 4-ந்தேதி, வாஷிங்டன் விமான நிலையம் அருகே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பயணம் செய்த ‘மரைன் ஒன்’(Marine One) ஹெலிகாப்டர் புறப்பட்ட சமயத்தில் மற்றொரு விமானமும் அதே வான்பரப்பில் பறப்பதற்கு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தவறுதலாக அனுமதி அளித்தனர். இதனால் அந்த விமானமும், டிரம்ப்பின் ஹெலிகாப்டரும் அருகருகே பறக்கும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் விமானிகள் துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பான தூரத்தில் பயணித்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், டிரம்ப்பின் ஹெலிகாப்டர் புறப்படுவது குறித்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால், அதிபர் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் புறப்படும் இடம் வழக்கமான இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த புதிய இடத்தில் இருந்து வாஷிங்டன் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. வெள்ளை மாளிகை கட்டுமானப் பணியால் சிக்னல் தடைபடுகிறது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கும் 'மரைன் ஒன்' விமானிகளின் குழுவினருக்கும் இடையிலான தகவல் தொடர்பை மேம்படுத்தும் நோக்கில், சிக்னல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் ஆண்டெனாவை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம்(FAA) தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/clearance-granted-to-another-aircraft-at-the-time-of-trumps-helicopter-departure-reports-indicate-signal-disruption-due-to-white-house-construction-work




