மதுரை, கள்ளழகர் கோவிலில் நடந்த திருவிழாவையொட்டி பெருமாளுக்கு 135 மூலிகைகள் கலந்த தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கள்ளழகர் கோவில் திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் மதுரை கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நிறை நாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆவணி மாதம் இந்த திருவிழா 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு ஆவணி திருவிழாவானது, நேற்று மூலவர் சன்னதி முன்புள்ள சுந்தரபாண்டியர் கொறடு மண்டபத்தில் மேளதாளம் முழங்க பட்டர்களின் வேத மந்திரத்துடன் தொடங்கியது. உற்சவர் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடந்தது. பின்னர் சுவாமியின் முன்பாக நெல் உள்ளிட்ட தானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதன் மீது அழகர்மலை உச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட நூபுரகங்கை புனித தீர்த்தம் அபூர்வ 135 வகையான மூலிகைகள் திரவியங்களுடன் இணைக்கப்பட்டது. மேலும் 108 கலசங்கள் தனித்தனியே வைக்கப்பட்டு அதன் மீது தேங்காய், வாழைப்பழம், பூமாலை, தாம்பூலம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைக்கப்பட்டன. பவித்திர மாலைகள் தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பட்டர்களின் மந்திரங்களுடன் மூலவர் சுந்தரராச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கும் பட்டு நூல் திருப்பவித்திர மாலைகள் மங்கள இசையுடன் அணிவிக்கப்பட்டன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆண்டுக்கு ஒருமுறை இந்த விழா நடைபெறுவது வழக்கம். நேற்று தொடங்கிய திருவிழா வருகிற 27-ந்தேதி (பவுர்ணமி) நிறைவுபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஹரிஹரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். நேற்று விடுமுறைநாள் என்பதாலும், திருவிழா நடந்ததையொட்டியும் காலையில் இருந்து மாலை வரை கோவிலின் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/135-types-of-herbs-theertham-abhishekam-for-perumal-at-kallazhagar-temple




