இந்தியன் ரெயில்வே. உலக அளவில் அதிக பயணிகளுக்கு ரெயில் சேவை வழங்கி வருவதில் முதலிடம் வகிக்கிறது. நிர்வாக வசதிக்காக 18 மண்டலங்கள், 68 கோட்டங்களைக் கொண்ட இந்த நிறுவனம், இந்திய அரசுக்கு சொந்தமானது. இந்தியன் ரெயில்வே மூலம் தினமும் 4,111 எக்ஸ்பிரஸ் - மெயில் ரெயில்கள், 3,313 பயணிகள் ரெயில்கள், 5,774 புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோக, சரக்கு ரெயில்கள் தனி. தினமும் 2 கோடியே 30 லட்சம் பயணிகள் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்டுக்கு 500 கோடி பேர் ரெயில்களில் பயணிக்கின்றனர். இதுபோக, சரக்கு ரெயில்கள் மூலம் 35 கோடி டன் பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. மஞ்சள் நிற வெற்று பலகை இந்தியாவில் 67,956 கிலோ மீட்டர் நீளமுள்ள ரெயில் பாதையும், 7,364 ரெயில் நிலையங்களும் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் தொடக்கம் மற்றும் முடிவில் பெரிய மஞ்சள் நிற பெயர் பலகையில், கருப்பு நிறத்தில் ரெயில் நிலையத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும். அதுவும் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் பெரிய எழுத்தில், தொலைவில் இருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு ரெயில் நிலையத்திற்கும் இதுதான் அடையாளம். ஆனால், இந்தியாவில் இத்தனை ரெயில் நிலையங்கள் இருந்தும், பெயரே இல்லாத ஒரு ரெயில் நிலையம் இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? அன்று முதல் இன்று வரை மஞ்சள் நிற வெற்று பலகையை மட்டுமே அந்த ரெயில் நிலையம் தாங்கி நிற்கிறது. ரெய்நகர் ரெயில் நிலையம் பெயர் இல்லாத இந்த ரெயில் நிலையம் மேற்கு வங்காள மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தில் பாங்குரா - மசாகிராம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. தென்கிழக்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரெயில் நிலையம் 1916-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 1995-ம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் பாதையை கொண்டிருந்த இப்பகுதி, 2005-ம் ஆண்டு முதல் அகல ரெயில் பாதையுடன் மின்மயம் ஆக்கப்பட்டது. தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வரும் இந்த ரெயில் நிலையத்திற்கு பெயர் மட்டும் கிடையாது. ஆரம்பத்தில் இந்த ரெயில் நிலையத்தின் பெயர் ரெய்நகர் என்று இருந்தது. ஆனால், இந்த பெயரை அங்குள்ள ரைனா கிராம மக்கள் விரும்பவில்லை. எங்கள் ஊரில் ரெயில் நிலையத்தை வைத்துக்கொண்டு, பக்கத்து ஊர் பெயரை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் ஊர் பெயரான ரைனாவை ரெயில் நிலையத்திற்கு சூட்டுமாறும் வலியுறுத்தி வந்தனர். சுற்றுலா பயணிகளையும் கவர்கிறது ரெயில் நிலையத்திற்கு பெயர் வைக்கும் விவகாரத்தில் இரு கிராம மக்களுக்கு இடையே எழுந்த பிரச்சினை ரெயில்வே வாரியம் வரை சென்றது. இதனால், அனைத்து பெயர் பலகைகளிலும் இருந்த ரெய்நகர் என்ற பெயரை ரெயில்வே நிர்வாகம் அழித்துவிட்டது. அதன்பிறகு, பெயர் இல்லாத ரெயில் நிலையமாக இருந்து வருகிறது. என்றாலும், ரெயில் டிக்கெட்டுகளில் முந்தைய பெயரான ரெய்நகர் என்றே அச்சிட்டு வழங்கப்படுகிறது. இரு கிராம மக்கள் இடையே பிரச்சினை முடிவுக்கு வந்தால்தான் ரெயில் நிலையத்தின் பெயர் என்னவென்பது தெரியவரும் என்றாலும், ரெயில்வே ஆவணங்களில் ரைனா, ரெய்நகர் என்று இரு பெயர்களுமே பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் இப்படியொரு பிரச்சினை. பெயர் இல்லாத ரெயில் நிலையம் இப்போது சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/what-is-it-a-train-station-without-a-name-thats-amazing




